அருணாச்சலப் பிரதேசத்தில் சீன ஊடுருவல் இல்லை .. பெர்னாண்டஸ்
கவுஹாத்தி:
அருணாசலப் பிரதேச மாநில எல்லைப் பகுதியில், சீன ராணு வீரர்களின் ஊடுருவல் எதுவும் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜார்ஜ்பெர்னாண்டஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
அஸ்ஸாம் மாநிலத் தலைநகர் கவுஹாத்தியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், அருணாச்சலப் பிரதேச முதல்வர் முகுத் மிதி, அம்மாநிலத்தின் சர்வதேச எல்லைகட்டுப்பாட்டைத் தாண்டி சீன ராணுவ வீரர்கள் ஊடுருவியுள்ளதாகப் புகார் கூறியுள்ளார்.
ஆனால் அவர் கூறியதுபோல் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் சீன ராணுவ வீரர்களின் ஊடுருவல் எதுவும் இல்லை. எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து யாரும் கவலையடைய வேண்டியதில்லை.
அருணாசலப் பிரதேச மாநிலம், மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ரூபா என்ற எல்லையோர நகருக்கு நானும், ராணுவ வீரர்களும் சென்றுபார்வையிட்டோம். அப்பகுதியில் பதட்டம் எதுவும் இல்லை. 100 சதவீதம் அப்பகுதியில் முழு அமைதி நிலவுகிறது. போதுமான அளவுக்கு ராணுவவீரர்கள் அங்கு இருப்பதால், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை என்றார்.
முன்னதாக, அருணாச்சலப் பிரதேசத் தலைநகர் இட்டாநகரில் முதல்வர் முகுத் மிதி, அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசைச் சந்தித்துப் பேசினார்.
அதற்குப் பின் நிருபர்களைச் சந்தித்த முதல்வர் முகுத் மிதி கூறுகையில், எல்லைப் பகுதியில் சீன வீரர்களின் ஊடுருவல் இல்லை என்று உறுதியாகக் கூறிவிடமுடியாது. அவ்வப்போது அவர்களின் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது. பாதுகாப்பை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
1962-ம் ஆண்டு சீனாவுக்கும், இந்தியாவுக்கும் கடும் சண்டை நடந்தது. அருணாசலப் பிரதேச மாநிலத்துக்குள் சீன வீரர்கள் வெகு தூரம் ஊடுருவியதைஅடுத்து இச் சண்டை நடந்தது. இதில் இருதரப்புக்கும் இடையே கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.