பா.ஜ.க.கொண்டாடிய தீபாவளியில் முஸ்லீம்கள்
டெல்லி:
கடந்த 20 ஆண்டுகளில் முதன்முறையாகத் தலைநகர் டெல்லியில் பாரதிய ஜனதாக் கட்சித் தொண்டர்கள் கொண்டாடிய தீபாவளிப் பண்டிகையில், முஸ்லீம்கள்கலந்து கொண்டனர்.
டெல்லி அசோகா ரோட்டிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகத்தில் தீபாவளி விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தீபாவளிப்பண்டிகையையொட்டி கட்சி அலுவலகம் வண்ணத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டுக் களை கட்டியிருந்தது. பாரம்பரிய உடைகளில் இந்துக்களும்,முஸ்லீம்களும் இப்பண்டிகையில் கலந்து கொண்டனர்.
மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட இந்தப் பண்டிகையில் 50 முஸ்லீம் பெண்கள் உள்பட சுமார் 200 க்கும் மேற்பட்ட முஸ்லீம் இனத்தவர் கலந்துகொண்டனர். முஸ்லீம் நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அரபு நாட்டுப் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பாரதிய ஜனதாக் கட்சி சிறுபான்மைப் பிரிவு அமைப்பாளர் எஸ்.எம்.ஒஸ்மானி கூறுகையில், தீபாவளியை இந்துக்கள் கொண்டாடும்பண்டிகையாகக் கொண்டாடாமல், அனைத்து மதத்தினரும் கொண்டாடும் வகையில் அதை தேசியப் பண்டிகையாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம்.
இதன் மூலம் இந்து- முஸ்லீம் மக்களிடையே சகோதர மனப்பான்மை ஏற்படும். நாங்கள் ஒருபோதும் முஸ்லீம்களை எதிரியாக நினைப்பதில்லை என்றார்.
பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் தலைமையில், சுமார் 3 மணி நேரம் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. பிரதமர் வாஜ்பாயும்இப்பண்டிகையில் கலந்து கொண்டார்.
பண்டிகையில் கலந்து கொண்ட பங்காரு லட்சுமண் கூறுகையில், கடந்த ஆயிரம் வருடங்களாக தீபாவளி இந்துக்களின் பண்டிகையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது. தற்போது நாம் கொண்டாடும் இந்தப் பண்டிகையில் முஸ்லீம்கள் கலந்து கொண்டிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம்தீபாவளிப் பண்டிகை அனைத்து மதத்திற்கும், இனத்திற்கும் அப்பாற்பட்டது என்பது விளங்கும்.
பாரதிய ஜனதாக் கட்சியின் முக்கிய நோக்கமே நாட்டில் பாதுகாப்பையும், தேசிய ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்துவதுதான். சாதி, மத, இனவேறுபாடின்றி அனைத்து மதத்தினருக்கும் பாரதிய ஜனதாக் கட்சியின் வாசல் திறந்திருக்கும் என்றார்.
மூஸ்லீம்கள் பலரும் இவ்விழாவில் கலந்து கொண்டனர். மால்கியாத் சிங் தலைமையில் பஞ்சாப் பாப் இசைப் பாடல்களுடன் தீபாவளி விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
பாரதிய ஜனதாக் கட்சித் துணைத் தலைவர் ஜனா. கிருஷ்ணமூர்த்தி, மூத்த தலைவர் மதன் லால் குரானா, ராஜ்யசபா உறுப்பினர்கள் மல்கானி, சாங்க்விஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications