நிலச்சரிவில் 52 பேர் பலி
ஜகார்தா:
இந்தோனேசியாவின் மத்தியப் பகுதியான ஜாவாவில் கடும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் 52 பேர் இறந்தனர்.
இந்தோனேசியாவின் பல பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக அடைமழை பெய்து வருகிறது. கடும் மழையினால், பர்வோர்ஜோ என்ற மலைமாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்த 52 பேர்பலியானார்கள்.
நிலச்சரிவு ஏற்பட்ட பர்வோர்ஜோ மாவட்டம், ஜகார்தா பகுதியிலிருந்து 140 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்று செய்தி வெளியாகியுள்ளது. சாவுஎண்ணிக்கை இன்னும் உயரலாம் என்று தெரிகிறது. மீட்புப் படையினர் சடலங்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தோனேசியாவில் கடந்த ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலச்சரிவாகும் இது. கடந்த வாரம் சிலாகேப் மற்றும் பானியுமாஸ்மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 28 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.