என்னை வேவு பார்க்கிறார் கருணாநிதி .. கூறுகிறார் ஜெ.
மதுரை:
தமிழக முதல்வர் கருணாநிதி மாநிலத்தில் நல்லாட்சி நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடாமல் எனது ஒவ்வொரு அசைவிலும் குற்றம் கண்டுபிடித்துக்கொண்டும், வேவு பார்த்துக் கொண்டும் இருக்கிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல்லில் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் வெண்கல முழு உருவச் சிலையைத் திறந்து வைத்து அவர் பேசியதாவது:
தஞ்சாவூரில் உள்ள ஆலங்குடி கோவிலுக்குப் பிரார்த்தனை செய்வதற்காகச் சென்றேன். இது என் தனிப்பட்ட விஷயம். அரசியலுக்கு அப்பாற்பட்டது.ஆனால், இந்த விஷயத்தை பூதாகரமாக்கி, இதற்கு அரசியல் சாயம் பூச நினைக்கிறார் கருணாநிதி.
தமிழக அரசுப் பேருந்துகளில் எழுதி வைக்கப்பட்டிருந்த திருக்குறளை அகற்றிவிட்டு கருணாநிதி, தனது பொன்மொழிகளை எழுதி வைத்துள்ளார். தமிழகத்தில்மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அரசுப் பேருந்துகளில் திருக்குறள் எழுதி வைக்கப்படும் என்றார் ஜெயலலிதா.
முன்னதாக, திண்டுக்கல்லில் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலையை ஜெயலலிதா திறந்து வைத்தார். இதையொட்டி அதிமுக சார்பில் பேரணி நடத்தப்பட்டது.நிகழ்ச்சியில், அதிமுக சார்பில் 572 பேருக்கு அயர்ன் பாக்ஸ் மற்றும் ஆடைகள் வழங்கப்பட்டன.
உடல் ஊனமுற்றோர் 52 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் வழங்கப்பட்டன. எம்.ஜி.ஆர்.சிலை திறப்பு விழாவில் அதிமுக அவைத்தலைவர் காளிமுத்து,பொருளாளர் சீனிவாசன், எம்.பி.தினகரன் மற்றும் சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
யு.என்.ஐ.