பிரேமதாசா மீது இலங்கை தளபதி புகார்
கொழும்பு:
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்து, உதவி செய்தது பிரேமதாசா அரசுதான் என்று இலங்கை ராணுவ தளபதி குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை ராணுவத் தளபதி லியோனல் பலகல்லே ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், இந்திய அமைதிப்படை இலங்கையில் சுமார் 4ஆண்டுகள் தங்கி, புலிகள் இயக்கத்தை பலவீனப்படுத்தியது. ஆனால், மறைந்த அதிபர் பிரேமதாசா புலிகள் இயக்கத்துக்கு ஏராளமான ஆயுதங்களைக்கொடுத்து உதவி செய்து அந்த இயக்கத்துக்குப் புத்துயிர் அளித்தார்.
1988-ம் ஆண்டு இலங்கையில் இருந்து இந்திய அமைதிப் படையை வெளியேற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் புலிகளுக்கு ஆயுத உதவி செய்தார்பிரேமதாசா. அவர் எந்தவித முன்யோசனையும் இல்லாமல் செயல்பட்டார்.
இந்திய அமைதிப் படையினர் இலங்கையிலிருந்து வெளியேறிய நேரத்தில், புலிகளை எதிர்த்துப் போரிட இலங்கை ராணுவம் தயாராக இல்லை. 1990 ம் ஆண்டுபுலிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கிய போதுதான் ராணுவமும் முடுக்கி விடப்பட்டது. பின்னர் 1994 ம் ஆண்டு சந்திரிகா அரசு ஆட்சிக்கு வந்தது.
சந்திரிகா அரசு வந்ததும், விடுதலைப் புலிகளுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயற்சி எடுத்தோம். ஆனால் புலிகள் உடன்படவில்லை. அந்தநேரத்தில் ராணுவம் திறமையாகச் சண்டையிட்டு, யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றியது.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண வேண்டுமானால், அங்குள்ள தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். புலிகளை, ராணுவம் முறியடிக்கவேண்டும். சமீபத்தில் யானைஇறவு முகாமில் விடுதலைப்புலிகளிடம், ராணுவம் தோற்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம் என்று தனதுபேட்டியில் கூறியுள்ளார் லியோனல்.