திருப்பதியில் பக்தர்களுக்கு பாஸ் புக்
திருப்பதி:
திருப்பதி வெங்கடாச்சலபதி ஆலயத்திற்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு பாஸ் புத்தகங்கள் வழங்க திருமலை -திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தினர்திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணய்யா நிருபர்களிடம் கூறியதாவது:
திருப்பதியில் சுவாமி வெங்கடாச்சலபதியை தரிசிக்க வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நன்கொடை அளிக்கும் பக்தர்கள் உயர்அதிகாரிகளின் பரிந்துரை பெற்றால் தான் சிறப்பு தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்த பக்தர்கள் இனிமேல் நேரடியாகவே சிறப்பு தரிசனம் செய்ய பாஸ் புத்தக வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அவர்கள் பாஸ் புத்தகத்தைக்காட்டி எளிதாக கோவிலுக்குள் சென்று வரலாம். சனி, ஞாயிறுகளிலும், விடுமுறை தினங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால்அவர்களுக்கு சுவாமி தரிசனம் செய்வதிலும், திருப்பதியில் தங்குவதிலும் பல வசதிக்குறைவுகள் ஏற்படுகின்றன.
அவர்களது பிரச்சனைகளைப் போக்க நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. மேலும் பக்தர்களின் வருகை அதிகரிப்பால் சாலைகளில் அடிக்கடி விபத்துக்கள்ஏற்படுகின்றன. இதைத் தவிர்க்க போக்குவரத்தை சீர்செய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்களின் தேவைக்கேற்ப கோவில் பிரகாரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யவும்உத்தரவிடப்பட்டுள்ளது.
வைகுண்டம் காம்பிளக்சில் சிலர் வரையறுக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்கிறார்கள். அவர்கள் மேல் வழக்குத்தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் லட்டு வழங்கும் கவுண்டர்களில் கூட்டத்தைச் சமாளிக்க ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார் கிருஷ்ணய்யா.
யு.என்.ஐ.