அரசுடன் பேச்சு நடத்த புலிகள் நிபந்தனை
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால் சில நிபந்தனைகளை அரசு ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று விடுதலைப்புலிகள் கூறியுள்ளதாக அதிபர் சந்திரிகா குமாரதுங்கா வியாழக்கிழமை தெரிவித்தார்.
ஆனால் இதுகுறித்து நார்வே தூதுக்குழுவினர் தெளிவான விவரங்கள் எதையும் கூறவில்லை என்றும் அவர் கூறினார்.
அதிபர் சந்திரிகா குமாரதுங்கா இதுகுறித்துக் கூறுகையில், இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும்இடையே சமரசம் செய்து வைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழு இறங்கியுள்ளது.
நார்வே தூதுக் குழுவைச் சேர்ந்த எரிக் சால்ஹெம்ஸ், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை நவம்பர் 1 ம் தேதி சந்தித்துப் பேசினார்.
அப்போது, அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமானால், அதற்கு முன் எங்களது சில நிபந்தனைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று புலிகள்கூறியதாக, நார்வே தூதுக்குழுவினர் எங்களுக்குத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் எந்தெந்த நிபந்தனைகள் என்பது குறித்து நார்வே தூதுக்குழுவினரிடம், புலிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
ஆனால், புலிகள் சார்பில் சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டால், அந்த நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமா? வேண்டாமா? என்பது குறித்துஇலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே தெரிவிக்கப்படும் என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு சந்திரிகா அழைப்பு:
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே கடந்த 17 வருடங்களாகத் தொடர்ந்து சண்டைநடந்து வருகிறது.
இந்தச் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
அவர்கள் இதைப் புரிந்து கொண்டு அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வருடக்கணக்கில் ஒரு நாட்டில் சண்டை நடந்துகொண்டிருப்பதும், ஆயிரக்கணக்கில் உயிர்ப்பலிகள் நடப்பதும் நாட்டின் எதிர்காலத்துக்குக் குந்தகம் விளைவிப்பதாகும்.
இதைக் கருத்தில் கொண்டும், நாட்டில் ஜனநாயகத்தைச் தழைக்கச் செல்லும் வகையிலும் விடுதலைப் புலிகள், அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுன்வர வேண்டும்.
ஆனால் அதே நேரம் யாழ்ப்பாணம், யானையிறவு மற்றும் சண்டை நடக்கும் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தங்களது தாக்குதலைக் கைவிடமாட்டார்கள்என்றார் சந்திரிகா குமாரதுங்கா.
யு.என்.ஐ.