ஜெ. ஊழலை மக்கள் மறக்கவில்லை .. ஆர்.எம்.வீ.
கோவை:
தி.மு.க., அணி தான் வரும் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என கோவையில் எம்.ஜி. ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கோவையில் தெரிவித்தார்.
கோவையில் எம்.ஜி.ஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:
தமிழக அரசியலில் குழப்பமான சூழ்நிலை நிலவுகிறது. தேர்தல் முடிந்து முடிவுகள் வெளிவரும்போது மக்களின் தெளிவான தீர்ப்பு வெளியாகும். இந்தமுடிவில் தி.மு.க.,அணி வெற்றி பெற்றிருக்கும்.
ஜெயலலிதா மீதுள்ள அதிருப்தி இன்னும் தொடர்ந்து கொண்டு தான் உள்ளது. தி.மு.க., அரசு கிராமப் புறங்களில் தன்னிறைவுத் திட்டங்களை முழுமையாகநிறைவேற்றியுள்ளது. ஜெ. ஆட்சியில் நாட்டில் நடந்த அராஜகங்கள், ஊழல்களை மக்கள் எளிதாக மறந்து விடவில்லை. மக்கள் இவற்றைமறக்கவும் மாட்டார்கள்.
கூட்டணி ஆட்சியைப் பொறுத்தவரை அந்த அணிக்கு தலைமை ஏற்கும் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணியில் இடம் பெரும் கட்சிகள் முடிவு செய்யஇயலாது.
கடந்த 96ம் ஆண்டில் அ.தி.மு.க.,ஊழல் கட்சி எனக் கூறி த.மா.கா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து நின்று போட்டியிட்டன. ஆனால் இப்போதுபா.ஜ.,வுடன் தி.மு.க., கூட்டணி யை மதவாதக் கூட்டணி எனக் கூறி, மதவாதக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டதாகக் கூறி மக்கள் விரோதசக்தியான ஜெயலலிதாவை ஆதரிக்கின்றனர்.
எலியூருக்குப் பயந்து புலியூருக்குள் புகுந்து கொண்ட கதையாகத் தான் இது உள்ளது. மக்களால் நிராகரிக்கப்பட்ட ஊழல் சக்தியை ஏற்று அதற்கு மரியாதைதேடும் முயற்சியில் இந்தக் கட்சிகள் இறங்கியுள்ளன.
புரட்சித் தலைவரால் விரோதி என்று அடையாளம் காட்டப்பட்ட ஜெயலலிதாவை அரசியலை விட்டு ஒழிப்பதே எங்கள் லட்சியம். ஜெயலலிதாவின்மீதான வழக்குகளைத் தீவிரமாக விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம்.
ஜாதிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவை இந்த தேர்தல் முடியும் வரை தான். பின்னர் அவை தானாக முடிந்து விடும் என்றார்.