நாளை கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி:
நாடாளுமன்றம் திங்கள்கிழமை கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் நடைபெறும்.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் திங்கள்கிழமை தொடங்குகிறது. டிசம்பர் மாதம் 22 ம் தேதி வரை இந்தக் கூட்டம் நடக்கும்.குளிர்காலக் கூட்டத் தொடரில் மொத்தம் 48 மசோதாக்கள் விவாதத்துக்கு வருகின்றன.
இவற்றில் 26 மசோதாக்கள் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் இருப்பவை. புதிதாக 22 மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன.
பெண்கள் இட ஒதுக்கீடு:
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டதிருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டு இன்னும் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது.
இந்த நிலையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா மீது இந்தக் கூட்டத் தொடரில் விவாதம் நடைபெறும் என்று சபாநாயகர் பாலயோகி அறிவித்துள்ளார்.அனைத்துக் கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டால் இந்த மசோதா நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு பிரச்சனை:
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் கண்டித்துள்ள நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தில் அந்தப் பிரச்சனைபரபரப்பாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரு சில பிரச்சனைகளில் சேர்ந்து குரல் கொடுக்க காங்கிரசும், இடது சாரி கட்சிகளும் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆகவே இந்தக் கூட்டத்தொடர் காரசாரமாக இருக்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள்.
காங். எம்.பி.க்கள் கூட்டம்:
இதற்கிடையே, நாடாளுமன்றக் கூட்டத்தில் எந்த பிரச்சனைகளை கிளப்பலாம் என்பது பற்றி விவாதிக்க காங்கிரஸ் எம்.பி.க்கள் கூட்டம்டெல்லியில் திங்கள்கிழமை நடக்கிறது.
இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா, தேசிய வங்கிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்கும் அரசின் நடவடிக்கைகளை கடுமையாகஎதிர்க்க காங்கிரஸ் கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.