ரம்ஜானையொட்டி காஷ்மீரில் போர்நிறுத்தம் அறிவிப்பு
டெல்லி:
ரம்ஜான் மாதத்தில் காஷ்மீரில் ராணுவத் தாக்குதல் மேற்கொள்ளப்படாது என்று மத்திய அரசு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.
தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்துவிவாதிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், திங்கள்கிழமை நடக்கவுள்ள நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை ஒரு மனதாகநிறைவேற்றுவது என முடிவு செய்யப்பட்டது.
இதுதொடர்பாக, அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சுநடத்தும் அதிகாரம் உள்துறை அமைச்சர் அத்வானிக்கு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸ் பேசுகையில், காஷ்மீர் தீவிரவாதிகள் பலர் இந்தியாவுடன் போர்நிறுத்தம் செய்யதயாராக இருப்பதாகவும், அவர்களது கோரிக்கையை நாம் பரிசீலிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து பிரதமர் வாஜ்பாய் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான சூழ்நிலை நிலவ வேண்டும். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து அமைப்புக்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தஅரசு தயாராக உள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி நான் ஸ்ரீநகர் சென்றிருந்தபோது அங்குள்ள நிலையை நன்றாகப் புரிந்து கொண்டேன். பிரச்சனைகளை மனிதாபிமானத்துடன்தீர்த்து வைக்க வேண்டும் என்பதை நான் உணர்ந்தேன். வன்முறையால் எத்தனையோ உயிர்ப்பலிகள் ஏற்பட்டுள்ளன. இந்துக்கள், முஸ்லீம்கள், புத்தமதத்தினர், சீக்கியர் அனைவரும் ஒரே மாதிரி மதிக்கப்பட வேண்டும் என்று அந்த மாநில மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தேன்.
காஷ்மீர் பிரச்சனையைப் பொறுத்தவரை இந்தியா எப்போதும் அமைதியான தீர்வையே விரும்புகிறது. கடந்த 2 ஆண்டுகளாக நடந்து உள்ள சம்பவங்களும்இந்தியா எந்த அளவு அமைதியை விரும்பியது என்பதை நிருபித்துள்ளது.
மேலும் சந்தேகத்துக்கு இடமின்றி இந்தியாவின் பாதுகாப்புக்குப் பங்கம் விளையுமானால் அதை துணிச்சலுடன் எதிர்கொண்டு நமது தேச ஒற்றுமையையும்,ஒருமைப்பாட்டையும் பாதுகாப்போம்.
வரும் நவம்பர் மாதம் 26 ம் தேதி ரம்ஜான் தொடங்குகிறது. முஸ்லீம்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் அனைவரும் அமைதியாகவும்,ஒற்றுமையாகவும் வாழ வேண்டும் என்ற முகமது நபியின் கருத்துக்கு இணங்க காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கு எதிரான அனைத்துதாக்குதல்களையும் நிறுத்தி விடுமாறு பாதுகாப்பு படைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று வாஜ்பாய் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்னதாகப் பிரதமர் வாஜ்பாயை, காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா சந்தித்துப் பேசினார். அப்போது, அவர்கள் காஷ்மீர் மாநிலத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் உள்பட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.
தீவிரவாதிகள் அமைதி:
மத்திய அரசு போர்நிறுத்தம் அறிவித்துள்ளதற்கு, காஷ்மீர் தீவிரவாதிகள் தரப்பிலிருந்து எந்தப் பதிலும் இல்லை. அவர்களும் போர்நிறுத்தம் செய்யதயாரா என்பது குறித்து எந்த செய்தியும் இதுவரை இல்லை.
ஐ.ஏ.என்.எஸ்.