தடா கைதிகளை சந்திக்கிறார் நெடுமாறன்
சென்னை:
மைசூர் சிறையில் இருக்கும் 51 தடா கைதிகளை வருகின்ற 25-ம் தேதி தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் தலைமையிலான தூதுக்குழுவினர் சந்தித்துப் பேசுகிறார்கள்.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் நெடுமாறன் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
சென்னையில் வருகின்ற 23-ம் தேதி மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் 70-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
அகில இந்திய அளவில் பல்வேறு மனித உரிமை அமைப்புத் தலைவர்களும் பங்கேற்பார்கள். அதிரடிப்படையின் அட்டூழியங்கள், அதைப் புரிந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், அதிரடிப்படையை காட்டிற்கு அனுப்பலாமா? என்பதை பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
தமிழ்நாடு முழுவதும் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். முதல் மாநில மாநாடு வருகின்ற 26-ம் தேதி கொளத்தூரில் நடைபெறும். அகில இந்திய மக்கள் சிவில் உரிமைக் கழக தலைவர் கே.ஜி.கண்ணப்பன் தலைமை தாங்குகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகளை கொளத்தூர் மணி செய்து வருகிறார்.
மைசூர் சிறையில் உள்ள 51 தடா கைதிகளை வருகின்ற 25-ம் தேதி சந்திக்க உள்ளோம். என்னுடன் பேராசிரியர் கல்யாணி, புதுவை சுகுமாறன் ஆகியோர் வருவார்கள் என்றார் நெடுமாறன்.