திருவண்ணாமலை கோவிலில் ஏப்ரலில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா வரும் ஏப்ரல் மாதம் 11 ம் தேதி நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரர் கோவில் வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகும். இந்தக் கோவிலில் 1976 ம் வருடம் கும்பாபிஷேகம் நடந்தது. அதன்பிறகுகும்பாபிஷேகம் நடை பெறவில்லை.
எனவே, அந்தக் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று ஆன்மீகவாதிகளும், பொதுமக்களும் கோரி வந்தனர். அதன் பிறகுஅருணாசலேசுவரர் கோவிலில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்த இசையமைப்பாளர் இளையராஜா தலைமையில் திருப்பணி கமிட்டி ஒன்று கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இதில் சுமார் ரூ 2 கோடி செலவில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 217 அடி உயர ராஜகோபுரம், வள்ளால மகாராஜ கோபுரம், கிளிகோபுரம், பழனி ஆண்டவர் சன்னதி, பாதாள லிங்கேஸ்வரர் கோவில் மற்றும் வளாகத்தில் உள்ள இதர பகுதிகளின் திருப்பணி வேலைகள் தொடங்கியது.
இதில் ராஜகோபுர திருப்பணி இளையராஜா சார்பில் செய்யப்படுகிறது. மேலும், 80 சதவீத திருப்பணிகளை நன்கொடையாளர்கள் செய்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருப்பணிகளை விரைவாக முடிப்பதற்காக இளையராஜா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கும்பாபிஷேகத் திருப்பணிகள் பெருமளவு முடிந்து விட்டது. இன்னும் 20 சதவீத பணியை கோவில் நிதியிலிருந்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரல் 11 ம் தேதி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறும். இதுகுறித்து அரசுக்குத் தகவல்தெரிவிக்கப்பட்டு விட்டது. மேலும் கும்பாபிஷேகத்துக்கு முன்னதாக, திருவண்ணாமலையில் 16 கால் மண்டபம் கட்டும் பணியும் நிறைவு பெற்று விடும்.கோவில் முன்பு புதிய கொடிமரம் நடப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications