வீரப்பனால் என் தூக்கம் போச்சு: கர்நாடக முதல்வர்
பெங்களூர்:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட விவகாரம் என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா வியாழக்கிழமைதெரிவித்தார்.
நடிகர் ராஜ்குமார் கடந்த ஜூலை 30 ம் தேதி கடத்தப்பட்டார். அன்று முதல் முதல்வர் கிருஷ்ணா, நிருபர்களைச் சந்தித்துப் பேசுவதையே தவிர்த்து வந்தார்.
இதற்கிடையே, தற்போது ராஜ்குமார் விடுவிக்கப்பட்ட நிலையில், முதல்வர் கிருஷ்ணா நிருபர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட 109 நாட்களில் நான் தூக்கம் இல்லாமல் பல நாட்கள் தவித்து இருக்கிறேன். அவரது கடத்தல் சம்பவத்தால் நான் மனரீதியாகப் பாதிக்கப்பட்டது உண்மை. இதுபோன்ற மோசமான சம்பவம் சரித்திரத்தில் எந்த ஒரு அரசிலும் நடந்தது இல்லை.
கடத்தல் சம்பவம் அண்டை மாநிலமான தமிழகத்தில் நடந்தாலும், கர்நாடக முதல்வர் என்ற பெயரில் இவ்விஷயத்தில் பொறுப்பேற்க வேண்டியது எனதுகடமை.
கன்னடர்- தமிழர் இடையே மொழிக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்றும் பயந்தேன். எப்படியோ பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டது.
சட்டசபை கூட்டம் முடிந்ததும் 4 நாட்கள் யாரும் கண்டு பிடிக்க முடியாத இடத்துக்குச் சென்று ஓய்வெடுக்க விரும்புகிறேன். அப்போது என் உடல்நிலை குறித்துமருத்துவ பரிசோதனையும் செய்து கொள்ள விரும்புகிறேன் என்றார் முதல்வர் கிருஷ்ணா.












Click it and Unblock the Notifications