நாமக்கல்: கனமழைக்கு 3 பேர் பலி
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை அருகே பெய்த கன மழைக்கு மூன்று பேர் இறந்தனர். இரண்டு பேர் காணாமல்போயினர்.
நாமக்கல் மாவட்டம் கொல்லி மலை அருகே பெய்த கனத்த மழையால் காட்டு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்த மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 5 பேரில் மூன்று பேர் இறந்தனர். இரண்டு பேரைத் தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
கொல்லிமலை அருகே உள்ள காளப்பநாயக்கன்பட்டியில், கை கால்களற்ற சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. இந்தசடலத்தைப் போலீசார் கைப்பற்றி பிரேதப் பரி சோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதே போன்று, வாழ வந்திக் கோட்டை என்ற இடத்தில் உள்ள அய்யர்காடு என்ற இடத்தில் உள்ள ஒரு அணைக்கட்டில், இரு ஆண்களின் சடலம் ஒதுங்கியது. இவையும் கொல்லிமலை அரசு ஆஸ்பத்திரியில் பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இந்த சடலங்களைப் பார்வையிட்ட இந்தப் பகுதி மக்கள், இறந்தவர்கள் ராசிபுரத்தைச் சேர்ந்த நடுவளவுகிராமத்தினர் தான் என்பதை உறுதி செய்தனர். வளஞ்ச சின்னையன் (70) கொளவ வெள்ளையன்,(60),பழனிச்சாமி (39), சந்திரன் (29), முத்து (30) ஆகிய 5 பேரும் சம்பவத்தன்று காளப்ப நாயக்கன் பட்டிக்குச் சென்றுகடையில் பொருட்கள் வாங்கியுள்ளனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு குறுக்கே இருந்த ஓடையைக் கடக்க முயன்றுள்ளனர். அப்போது மழை பெய்துகொண்டிருந்ததால், திடீரென காட்டாற்று வெள்ளம் வந்துள்ளது.
இந்த வெள்ளத்தில் 5 பேரும் அடித்துச் செல்லப்பட்டனர். இவர்களில் மூன்று பேரது உடல் கிடைத்தது. மற்றஇரண்டு பேரின் கதி என்ன என்பதைப் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
இறந்தவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள், வளஞ்ச சின்னையன், கொளவ வெள்ளையன் ஆகியோர்சகோதரர்கள் ஆவர். மேலும், பழனிச்சாமியும் அடையாளம் காணப்பட்டார்.