அதிரடிப்படையினருக்கு நவீன பாதுகாப்பு சாதனங்கள்
சென்னை:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிரடிப் படையினருக்கு நவீன ரக பாதுகாப்புசாதனங்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆந்திரா மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அம் மாநில போலீசாரின்பாதுகாப்புக்கென நவீன ரக குண்டு துளைக்காத புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட், குண்டு துளைக்காத ஹெல்மெட்,இரவிலும் துல்லியமாக தெரியக் கூடிய பைனாகுலர் போன்றவை விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வீரப்பனை பிடிக்கும் பணியில் இருக்கும் அதிரடிப் படையினருக்கும் இது போன்ற நவீன கருவிகள்வாங்கும் எண்ணம் இருந்து வந்தது.
தற்போது அந்த எண்ணம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த முறை வீரப்பனுடன் மோதல் ஏற்பட்டால் இருதரப்பிலும் அதிகமான உயிர் சேதம் ஏற்படும் என உளவுத் துறையினர் தமிழக அரசிடம் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடிப்படையினருக்கு நவீன பாதுகாப்பு சாதனங்களை நெதர்லாந்திலிருந்துவாங்க முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரூ 35,000 விலையில் 20 கிலோ எடையுள்ள புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட், ரூ 15,000 விலையில்குண்டு துளைக்காத ஹெல்மெட் போன்றவற்றை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 50 புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்டும், குண்டு துளைக்காத ஹெல்மெட்டும் உடனடியாக வாங்கப்பட்டுஅதிரடிப்படை வீரர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது.