ஊட்டி: தேயிலை தொழிலாளர்களின் சம்பளம் குறைகிறது
ஊட்டி:
தேயிலை விலை வீழ்ச்சியின் எதிரொலியாக தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தை 25 சதவீதம் குறைக்க தேயிலைத் தோட்ட அதிபர்கள் சங்கம்முடிவு செய்துள்ளது.
நீலகிரியில் கடந்த ஓராண்டாக தேயிலை விலை கடும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. இந்த வீ ழ்ச்சியால் தேயிலைத் தொழில் கடும் பாதிப்பிற்குள்ளாகிவருகிறது.
இந்த வீழ்ச்சியுடன் கடந்த சில வாரங்களாகவே குன்னூரில் உள்ள தேயிலை ஏல மையத்தில் ஏல விற்பனையிலும் இந்த வீழ்ச்சி தொடர்ந்து வருகிறது.
குன்னூர் தேயிலை ஏல மையத்தில் எப்போதும் இல்லாத அளவிற்கு தேயிலை கிலோ ஒன்றிற்கு சராசரியாக ரூ. 33. 18 ஆக இருந்து வருகிறது.தென்னிந்திய அளவில் இந்த சராசரி விலை ரூ. 44 ஆக இருந்து வருகிறது.
இதனால் தோட்ட அதிபர்கள் உட்பட தேயிலைப் பதப்படுத்தும் தொழிற்சாலைகளும் கடும் நஷ்டத்திற்குள்ளாகி வருகின்றன. இதையடுத்து தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் பெற்று வரும் சம்பள விகிதங்களில் 25 சதவீதத்தை குறைக்க தேயிலைத் தோட்டத் தொழிலதிபர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.குன்னூரில் நடந்த தேயிலை தோட்ட தொழிலதிபர்கள் சங்கக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
தொழிற்சாலை நிர்வாகத்தினர் செலுத்தி வரும் கலால் வரி, விற்பனை வரி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும். இறக்குமதி தேயிலையை அடியோடு ரத்துசெய்ய வேண்டும். தேயிலை ஏல மையங்களில் குறைந்த பட்சத் தேயிலை விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு தோட்டத் தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் மகேஸ்வரி, துணைத் தலைவர் ஹெக்டோ, நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டத்தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் வினோத் ஷெனாய் மற்றும் சி.ஐ.டி.யு, ஐ .என். டி. யு.சி உட்பட பல்வேறு தொழிற்சங்கப் பிரகர்கள் கலந்து கொண்டனர்.