கோவில் பணியாளர்கள் வேலைநிறுத்தம்
திருச்சி:
தமிழ்நாடு கோவில் பணியாளர்கள் சம்மேளன உறுப்பினர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர்.
திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கோவில்களில் வேலை செய்யும் ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.
இது குறித்து கோவில் பணியாளர்கள் சங்க துணைத் தலைவர் வைத்தியலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் கோவில்களில் பணிபுரியும் கோவில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம், விடுமுறை, விருப்பு ஓய்வு மற்றும் பிறசலுகைகளை அரசு அளிக்க வேண்டும். இது குறித்துப் பலமுறை அரசுக்கு எடுத்துக் கூறியும் கோரிக்கைகள் குறித்து, அரசு கண்டு கொள்ளவேயில்லை.
விழா காலங்களில் நடத்தப்படும் பூஜைகள், சடங்குகள் போன்றவற்றுக்கும் அதிக ஊதியம் வழங்க வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்திவெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அரசு கோவில் ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றா விட்டால் வரும் 13 ம் தேதி முதல் காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில்ஈடுபடப்போவதாக கோவில் ஊழியர்கள் சங்கப் பொருளாளர் பிரசன்னா வெங்கடேசன் கூறியுள்ளார்.
யு.என்.ஐ.