பெருந்துறையில் பள்ளிச் சுவர் இடிந்து மாணவர் பலி
ஈரோடு:
பெருந்துறை அருகே சத்துணவுக் கூடச் சுவர் இடிந்து விழுந்து மாணவர் பலியானார். மேலும் இரு மாணவர்கள் காயமடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே துடுப்பதியில் பஞ்சாயத்து யூனியனுக்குச் சொந்தமான ஆரம்ப பள்ளி செயல்பட்டுவருகிறது. இந்தப் பள்ளியில் படித்து வந்த 5ம் வகுப்பு மாணவர்கள் சதிஷ்குமார் (10). பிரகாஷ் (10), யுவராஜ் (10).
இவர்களுடன் சில மாணவர்களையும் சேர்த்து, சத்துணவுக் கூடம் அருகே உள்ள புதர் போலக் காட்சியளித்த பகுதியை தலைமைஆசிரியர் அகற்றக் கூறியுள்ளார். இதனையடுத்து மாணவர்கள் வேலையில் மும்முரமாக இறங்கினர்.
அப்போது எதிர்பாராதவிதமாக சத்துணவுக் கூட சுவர் இடிந்து விழுந்தது. இதில் சதிஷ்குமார் (10) என்ற மாணவர் இடிபாடுகளில்சிக்கி இறந்தார். இவர் சுள்ளிப்பாளையம் கங்காணி தோட்டத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவரது மகன். மேலும் பிரகாஷ், யுவராஜ்ஆகியோர் காயமடைந்தனர்.
சுவர் இடிந்து விழுந்தது குறித்து ஆசிரியர்களிடம் மாணவர்கள் உடனே தெரிவித்தனர். ஆசிரியர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தமாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சம்பவம் குறித்து அறிந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு தலைமை ஆசிரியரைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் இறங்கினர்.இதையடுத்து தலைமை ஆசிரியர் தலைமைறவானார்.
பின்னர் , சாலை மறியல் செய்த பொதுமக்களிடம், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளித்தனர்.இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications