சபரிமலை வருமானம் 19 கோடியைத் தாண்டியது
சபரிமலை:
மண்டல பூஜை விழா நெருங்குவதையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருமானம் ரூ 19 கோடியை தாண்டியுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்று விளங்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழாவையொட்டி கடந்த கார்த்திகை மாதம் 1 ம் தேதி நடைதிறக்கப்பட்டது. அன்று முதல் கேரளா, தமிழகம், கர்நாடகம், ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் விரதம் இருந்து இருமுடிகட்டி பஸ், கார், வேன்களில் வந்த வண்ணம் உள்ளனர்.
தினமும் காலை 4.30 மணி முதல் 12 மணி வரை நெய்அபிஷேகம், ஐயப்பசாமிக்கு நடத்தப்படுகிறது. இதனைக் காண பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.சபரிமலை முழுவதும் 24 மணி நேரமும் சரண கோஷம் ஒலித்துக் கொண்டே உள்ளது.
இந்த ஆண்டு கடந்த வெள்ளிக்கிழமை வரை வருமானம் ரூ 19 கோடியை தாண்டியது. கடந்த ஆண்டு இதே நாளில் கோவிலின் வருமானம் 17 கோடியே 77லட்சம்தான் கிடைத்தது.
அரவணை பாயாசம் விற்ற வகையில் ரூ 5 கோடியே 42 லட்சம் கிடைத்து உள்ளது. சென்ற ஆண்டு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அரவணை, அப்பம்வாங்கி சென்றனர். ஆனால் இந்த ஆண்டு அரவணை வாங்க அந்த அளவுக்கு கூட்டம் இல்லை.