நிச்சயம் பிடிப்போம் வீரப்பனை .. எஸ்.எம்.கிருஷ்ணா
சென்னை:
வீரப்பனைப் பிடிப்பதில் தமிழக, கர்நாடக மற்றும் மத்திய அரசு மிகவும் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா திங்கள்கிழமை சென்னையில் தெரிவித்தார்.
கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்றார். முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்துப் பேசினார்.பின்னர், கிருஷ்ணா நிருபர்களிடம் கூறுகையில், வீரப்பனை இத்தனை நாட்களுக்குள் பிடித்து விடுவோம் என்று கூறுவது சாத்தியமில்லாதது.
வீரப்பனைப் பிடிப்பதற்காக தமிழக, கர்நாடக அரசுகள் மற்றும் மத்திய அரசு தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கண்டிப்பாக வீரப்பனைப்பிடித்து விடுவோம்.
கூட்டு அதிரடிப்படை வீரர்கள் தங்களது தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர். அவர்கள் தேடுதல் வேட்டையில் மிக மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள் என்று நம்பலாம். அவர்களுக்கு உதவி செய்யும் வகையில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் செயல்பட்டு வருகின்றனர்.
வீரப்பனனைப் பிடிப்பதற்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் உதவி மிகவும் திருப்திகரமாக உள்ளது.
வீரப்பனைப் பிடிப்பது சம்பந்தப்பட்ட இரு மாநில போலீஸாரின் கடமையே தவிர, இதற்கு மத்திய அரசு உதவி தேவையில்லை என்று ஜார்ஜ் பெர்னான்டஸ்கூறியிருக்கிறார். இது குறித்து நான் எதுவும் கருத்து கூற விரும்பவில்லை.
வீரப்பன் விடுவிக்கக் கோரிய 51 தடா கைதிகள் குறித்த விசாரணை நடத்த மைசூரில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டுவிட்டது. தனி நீதிமன்றத்துக்குவிரைவில் புதிய நீதிபதி அமைக்கப்படுவார். புதிய நீதிபதி அமைக்கும் பணியை கர்நாடக உயர்நீதிமன்றம் செய்யும். தடா கைதிகள் மீதான விசாரணை வரும்ஜனவரி மாதம் 6 ம் தேதி முதல் தொடங்கும்.
முன்னதாக, கர்நாடக முதல்வர் கிருஷ்ணா மத்திய தொழில்துறை அமைச்சர் முரசொலி மாறனை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
நடிகர் ராஜ்குமாரை எவ்வித பிரச்சனையுமின்றி மீட்பதற்கு உதவி செய்த தமிழக முதல்வருக்கும், அமைதி காத்த தமிழக மக்களுக்கும் நன்றிகூறுவதற்காகவும் கிருஷ்ணா சென்னை வந்திருந்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications