தொட்டகாஜனூரில் ராஜ்குமார் மனைவி பூஜை
ஈரோடு:
நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா திங்கள்கிழமை தொட்டகாஜனூர் சென்று அங்கு பூஜை செய்தார்.
ஈரோடு மாவட்டம் தாளவடி அருகேயுள்ளது தொட்ட காஜனூர். இங்குதான் நடிகர் ராஜ்குமாரின் சொந்த வீடு உள்ளது. தனது பூர்வீக வீடான அந்தப் பண்ணைவீட்டிற்கு நடிகர் ராஜ்குமார் அவ்வப்போது குடும்பத்துடன் சென்று தங்கி விட்டு வருவது வழக்கம்.
அந்தப் பண்ணை வீட்டின் எதிரே புதிய பங்களா வீடு ஒன்றையும் ராஜ்குமார் கட்டியுள்ளார். கடந்த ஜூலை மாதம் நடிகர் ராஜ்குமார், தனது குடும்பத்தார்மற்றும் உறவினர்கள் ஆகியோருடன் இந்த வீட்டில் வந்து தங்கியிருந்த போதுதான் அவர், வீரப்பனால் கடத்தப்பட்டார்.
அந்தச் சம்பவத்திற்குப் பின் தற்போதுதான் நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மா, அவருடைய மருமகன் கோவிந்தராஜ் உள்பட சிலர் காரில்புறப்பட்டு தொட்டகாஜனூர் சென்று பூஜை செய்தனர். பின்னர் மாலை 4 மணிக்கு அவர்கள் பெங்களூர் திரும்பினர்.
தொட்டகாஜனூரில் பர்வதம்மாவின் வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.