70 தொகுதி கிடைக்குமாம் .. கூறுகிறது புதிய நீதிக் கட்சி
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலில் புதிய நீதிக்கட்சி தனித்து போட்டியிட்டு 70 இடங்களில் வெற்றி பெறும் என்று ஏ.சி.சண்முகம் கூறினார்.
புதிய நீதிக்கட்சித்தலைவர் ஏ.சி.சண்முகம் சென்னையில் திங்கள்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் ஜனவரி மாதம் 3-ம் தேதி சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கிறது. பொதுக்குழுவில்தேர்தல் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.
எங்கள் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு பிப்ரவரி 11-ம் தேதி சீரணி அரங்கில் நடக்கிறது. மாநாட்டை யொட்டி ஊர்வலும் நடைபெறும். இதுவரை முப்பது மாவட்ட மாநாடுகள் நடத்தி முடித்துள்ளோம்.
தேர்தலுக்கு முன்பு மேலும் 34 மாநாடுகள் நடத்தப்படும். வட மாவட்டங்களில் மட்டுமின்றி தென் மாவட்டங்களிலும் புதிய நீதிக்கட்சிக்கு செல்வாக்குகூடியிருக்கிறது. தமிழ்நாட்டில் பெரிய அரசியல் கட்சியாக எங்கள் கட்சி மாறியிருக்கிறது.
நாங்கள் நடத்தும் மாநில மாநாட்டில் இருபது லட்சம் பேர் கலந்து கொள்வார்கள். தேர்தலில் தனித்து போட்டியிட எங்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.
தனித்து நின்றால் எழுபது தொகுதிகளில் எங்கள் கட்சிக்கு வெற்றி கிடைக்கும். பதினைந்து தொகுதிகளில் தி.மு.க - அ.தி.மு.க.வை விட அதிகஒட்டுக்கள் கிடைக்கும். எங்களுடன் வேறு ஏதேனும் கட்சிகள் கூட்டணி சேர்ந்தால் சேர்த்துக் கொள்வோம். ஆனாலும் அந்த அணி எங்கள்தலைமையில் தான் அமையும்.
தி.மு.க - அ.தி.மு.க.வை மக்கள் வெறுக்கிறார்கள். ராமதாஸூக்கு தி.மு.க, அ.தி.மு.க. கட்சிகள் பயப்படுகின்றன. எங்கள் கட்சி அனைத்துதொகுதிகளிலும் செல்வாக்குடன் இருக்கிறது. தேர்தலில் அதனை நிரூபிப்போம். புதிய நீதிகட்சியுடன் கூட்டணி அமைக்கிற கட்சிகளுக்கு அமைச்சரவையில்இடம் தருவோம்.
தமிழ்நாட்டில் இனிமேல் தனிக்கட்சி ஆட்சிக்கு வராது. கூட்டணி ஆட்சிதான் வரும். வருகின்ற 24-ம் தேதி எம்.ஜி.ஆர் நினைவு நாளையொட்டி ஊர்வலம்நடைபெறும் என்றார் சண்முகம்.