உதித்தது இன்னொரு கட்சி
சென்னை:
தமிழ்நாட்டில் சமூக நீதிக்கட்சி என்ற ஒரு புதிய கட்சி வெள்ளிக்கிழமை உதயமாகியது.
தமிழ்நாடு ராஷ்ட்ரிய ஜனதா தளத்தலைவர் ஜெகவீரபாண்டியனும் மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரகர்களும் அக்கட்சியிலிருந்து விலகி சமூகநீதிக்கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
அக்கட்சியின் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கா.ஜெகவீரபாண்டியன் சென்னையில் நிருபர்களிடம் இதைத் தெரிவித்தார். கட்சியின்கொடியையும் அவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் ஜெகவீரபாண்டியன் கூறியதாவது:
ராஷ்ட்ரிய ஜனதாதளக்கட்சி, சமூக நீதியை அடிப்படையாக கொண்டு தொடங்கப்பட்டதாகும். அது ஒரு ஜாதியின் கட்சியாக உருமாறி வருவதையடுத்துஅக்கட்சியிலிருந்து முப்பது செயற்குழு உறுப்பினர்கள் 25 மாவட்டத் தலைவர்கள் பிரிந்து புதிய கட்சி உருவாக்கத் திட்டமிட்டோம்.
சமூக நீதி, மனித நேயம், நல்லிணக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டும் காமராஜர், பெரியார், அம்பேத்கார் ஆகியோரை வழிகாட்டிகளாககொண்டும் இப்புதிய கட்சி வெள்ளிக்கிழமை முதல் செயல்படும். கட்சியின் முறைப்படியான தொடக்க விழா அடுத்த மாதம் நடைபெறும்.
இந்தக் கட்சியை தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்காக டெல்லி செல்லவுள்ளேன். கட்சியின் கொடியாக மூன்று வண்ண கொடியின் நடுவில் காமராஜர்படம் பொறிக்கப்பட்டிருக்கும்.
எங்கள் கட்சி மக்கள் விரோத தி.மு.க. வையும் மதவெறி பி.ஜே.பியையும் எதிர்த்து செயல்படும். அ.தி.மு.க தலைமையிலான அணியில் த.மா.காதலைவர் மூப்பனாருடன் இணைந்து மத சார்பற்ற அணியில் தொடர்ந்து நீடிப்போம்.
வரும் தேர்தலில் போட்டியிட்டு எங்கள் அணி வெற்றி பெற பாடுபடுவோம். தி.மு.க கட்சியில் தமிழக மக்கள் எல்லா வகையிலும்பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் தேர்தலில் புதிய கட்சி அமையும். தி.மு.க தோல்வியடையும்.
ஐக்கிய ஜனதா தள கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கக்கனின் சகோதரர் விஸ்வநாதன் கக்கன் எங்கள் கட்சியில் சேர்ந்துள்ளார். அவர் எங்கள்கட்சியின் முதன்மை துணைத் தலைவராக செயல்படுவார்.
நாட்டில் மக்களுக்கு சேவையாற்றுவதில் முன்னணியில் நிற்கும் ராஷ்ட்ரிய ஜனதா தலைவர் லாலு பிரசாத் யாதவை நாங்கள் மதிக்கிறோம். அதேசமயம் அவரது கட்சியிலுள்ள சிலர் பி.ஜே.பியின் துணையுடன் ராப்ரி தேவி அரசை கவிழ்த்து விட்டு புதிய ஆட்சி அமைக்க முயல்கின்றனர். அவர்களிடம் அவர்கவனமாக இருக்க வேண்டும் என்றார் ஜெகவீரபாண்டியன்.