திண்டுக்கல்லை பயமுறுத்திய சிறுத்தை
திண்டுக்கல்:
திண்டுக்கலில் 5 பேரைக் கடித்துக் குதறிய சிறுத்தையை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கடும் முயற்சிக்குப் பின் பிடித்தார்.
சனிக்கிழமை காலை நடந்த இந்த பரபரப்புச் சம்பவம் குறித்த விவரம் வருமாறு:
திண்டுக்கல் நேருஜி நகரில் வசித்து வருபவர் டாக்டர் சீனிவாசன். இவரது மனைவி ஜானகி. இவர்கள் வீட்டு சமையல் அறையில் சிறுத்தை பதுங்கியிருந்தது.
சமையலறையில் பதுங்கியிருந்த சிறுத்தையைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்த ஜானகி, உடனடியாக பக்கத்து வீட்டிலுள்ள போஸ் என்பவரை உதவிக்குஅழைத்தார். அவர் வந்து பார்த்த போது 5 அடி நீளமுள்ள சிறுத்தை போஸ் மீது பாய்ந்தது. உடனே அவர் அங்கிருந்து வெளியேறி, சிறுத்தை பதுங்கியிருந்தசமையலறையைப் பூட்டினார்.
போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் வந்ததும், சிறுத்தை பதுங்கியிருந்த அறையை கட்டிடத் தொழிலாளி சந்திரன் திறந்தார். அடுத்தநிமிடம் அவர் மேல் சிறுத்தை பாய்ந்தது. சந்திரனின் கையைக் கடித்து விட்டு மாடிக்குத் தாவியது. பின்னர் அங்கிருந்த கார்ஷெட்டுக்குள் புகுந்தது.
கார் ஷெட்டிலிருந்து சிறுத்தையைப் பிடிப்பதற்காகப் போலீஸார் முயன்றனர். ஆனால் அது அங்கிருந்து தப்பித்து ஓடி, பக்கத்து வீட்டுக்குத் தாவியது. இதைப்பார்த்ததும் அங்கு கூடி விட்ட பெருங்கூட்டத்தினர் அதை நோக்கி கற்களை வீசினர்.
உடனே சிறுத்தை அங்கிருந்து தப்பி சாலையில் ஓட ஆரம்பித்தது. அவ்வழியே வந்த இளங்கோ மற்றும் சுரேஷ் ஆகியோரையும் தாக்கியது.
இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் செல்லம் சிறுத்தையை நோக்கிப் பாய்ந்தார். சிறுத்தையுடன் தைரியமாக கட்டிப்புரண்டு சண்டை போட்டார். செல்லத்தின் இருகைகளையும் சிறுத்தை கடித்தது. இதையடுத்து இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் ராஜா சிறுத்தையை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றார். அதற்குள் அங்கு நின்றுகொண்டிருந்த முத்து என்பவர் தனது சைக்கிளை சிறுத்தை மீது ஏற்றினார். உடனே அது தடுமாறி விழுந்தது.
பின்னர் சிறுத்தையைக் கயிறால் கட்டி லாரியில் ஏற்றிக் கால்நடை மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுத்தைப் புலி இறந்தது.