தமிழகத்தில் புதிய கூட்டணி?
ஈரோடு:
தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க அணிகளுக்கு எதிராக புதிய நீதிக் கட்சி வலுவான கூட்டணியாகப் போட்டியிடும் என புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சிசண்முகம் தெரிவித்தார்.
ஈரோட்டில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
அ.தி.மு.க மீது இருந்த அதிருப்தியால் பொதுமக்கள் கடந்த தேர்தலில் தி.மு.க வுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் கணிசமான ஓட்டுக்களைப்பெற்று வெற்றி பெற்றனர். ஆனால் இந்த முறை, தி.மு.க வே, தனக்கு அ.தி.மு.க வுக்கு எதிரான ஓட்டு கிடைக்காது என கூறுகின்றனர்.
ஆளும் கட்சியினர் மீது பல்வேறு புகார்கள் குற்றச்சாட்டுக்களை பொதுமக்கள் எழுப்பி வருகின்றனர். 30 சதவீதம் ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன.எனவே, இரு கட்சிகளும் பொதுமக்களின் அதிருப்தியைப் பெற்றுள்ளனர். இதனால் புதிய கூட்டணிக்கு ஓட்டுகள் கிடைக்கும்.
அ.தி.மு.க., தி.மு.க.,பா.ஜ.,ம.தி.மு.க ஆகிய கட்சிகளைத் தவிர 5க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் புதிய கூட்டணிக்கான பேச்சுவார்த்தையை நடத்திவருகிறோம். இந்தப் பேச்சுவார்த்தையினால் புதிய வலுவான கூட்டணி தமிழகத்தில் உருவாகும்.
பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீட்டு மசோதாவை விரைவில் நிறைவேற்ற வேண்டும். தீண்டாமையை ஒழிக்கவும், தீண்டாமைச் சட்டம் தவறாகப்பயன்படுவதையும் தடுக்க வேண்டும் என்றார் சண்முகம்.