சண்முகம் விலகக் கோருகிறது பா.ஜ.க
புதுவை:
புதுவையில் முதல்வர் சண்முகம் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் வாங்கியதைத் தொடர்ந்து அவர் முதல்வர் பதவியில் நீடிப்பதற்குதார்மீக உரிமை இல்லை என்று புதுவை பாரதிய ஜனதா திங்கள்கிழமை கூறியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சி புதுவை பிரிவு தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரகு சுந்தரராமன் ஆகியோர் கூறியதாவது:
புதுவையில் சண்முகம் அமைச்சரவைக்கு அளித்து வந்த ஆதரவை 4 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்று விட்டனர். இதனால் முதல்வர் சண்முகத்தின் ஆட்சிபலம் இழந்து விட்டது. அவர் தானாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அல்லது கவர்னர் ரஜினிராய் அவரை சட்டசபையில் நம்பிக்கைவாக்கெடுப்புக் கோர உத்தரவிட வேண்டும்.
எம்.ஜி.ஆர்.அதிமுக வைச் சேர்ந்த எம்.எல்.ஏ. அனந்தவேலு சண்முகம் அமைச்சரவைக்கு ஆதரவு அளிக்கவில்லை. ஐக்கிய ஜனதா தள எம்.எல்.ஏ.ராஜாராமனும் எழுத்துப்பூர்வமாக தனது ஆதரவைக் கொடுக்கவில்லை.
புதுவையில் இதுவரை தேசிய ஜனநாயகக் கட்சி உருவாகவில்லை. தேர்தல் நேரத்தில் தேசிய ஜனதாக் கட்சி உருவாக நாங்கள் முயற்சிப்போம் என்றார்கள்.
யு.என்.ஐ.