தி.மு. க வை ஒழித்தே தீருவேன் .. ஜெ.
சென்னை:
தமிழகத்தில் ஆளும் தி.மு.க.வை முற்றிலுமாக ஒழிப்பதே லட்சியம் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
எம்.ஜி.ஆர்.நினைவுதினத்தையொட்டி அவர் எம்.ஜி.ஆர்.சமாதிக்கு மாலை அணிவித்துவிட்டு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
1987 ம் ஆண்டு இதே நாளில் எம்.ஜி.ஆர். நம்மைவிட்டுப் பிரிந்தார். கடந்த 69 ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கருணாநிதி மக்களையும், தி.மு.க தொண்டர்களையும்ஏமாற்றி லஞ்ச ஊழலில் ஈடுபட்டார். அதைத் தட்டிக் கேட்ட எம்.ஜி.ஆரை கட்சியில் இருந்து நீக்கப் பார்த்தார்.
அதனால் கருணாநிதியை அழிப்பதற்காக அ.தி.மு.க. வைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். கருணாநிதியின் பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளையும் மீறிஎம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். அதற்குப்பின் கருணாநிதியால் எவ்வளவு முயன்றும் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை.
மேலும் 1989 ம் ஆண்டு கருணாநிதி ஆட்சியைப் பிடித்தார். அப்போது அ.தி.மு.க. விற்கு எதிராக பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டார்.அதையெல்லாம் தாண்டி அ.தி.மு.க 91 ம் ஆண்டு ஆட்சியைப் பிடித்தது. அப்போது 5 ஆண்டு கால அ.தி.மு.க வின் ஆட்சியில் கருணாநிதிக்கோ அல்லது அவரதுகுடும்பத்தாருக்கோ அ.தி.மு.க எந்தத் தொல்லையும் கொடுக்கவில்லை.
அப்போது கருணாநிதியின் மனைவி ராஜாத்தி அம்மாள் மீது மருத்துவக் கல்லூரி நிலம் வாங்கியதில் முறைகேடு நடந்ததாகப் புகார் வந்தது. அது என்கவனத்திற்கு வந்த போது கருணாநிதிக்கு தேர்தலில் பொதுமக்கள் கொடுத்த தண்டனையே போதும் என்று கூறி விட்டேன்.
96 ம் ஆண்டில் கருணாநிதி ஆட்சிக்கு வந்தார். நாம் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதையெல்லாம் மறந்து விட்டு, என் மீது பொய் வழக்குகளைத்தொடர்ந்தார்.
இதனால் நான் சந்தித்த வேதனைகளும், துயரங்களும் கொஞ்சநஞ்சமல்ல. தன் மகன் ஸ்டாலினை பதவியில் அமர்த்த வேண்டும் என்ற ஒரே ஒருகாரணத்திற்காக அ.தி.மு.க.வை அழிக்கப் பார்க்கிறார் அவர்.
என்னை அவமானப்படுத்தி, அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்தி, சித்ரவதைப்படுத்தி செய்யாத தவறுகளுக்காகப் பொய் வழக்குகள் போட்டுள்ளார் கருணாநிதி.
அவரது ஆட்சியில் பயங்கரவாத, தீவிரவாத சக்திகள் வளர்ந்து வருகின்றன. எனது ஆட்சியில் அதிரடிப்படைகள் முடுக்கி விடப்பட்டதன் காரணமாக 150பேராக இருந்த வீரப்பனின் பலம் 3 ஆகக் குறைக்கப்பட்டது.
கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் வீரப்பனுக்கு ஊக்கம் அளித்து, வீரப்பனின் ஆயுத பலத்தையும், ஆள் பலத்தையும் அதிகரித்து விட்டார்.
ராஜ்குமார் கடத்தல் விவாகரத்தில், வீரப்பனிடம் இரு மாநில அரசுகளும் பணிந்து போனதற்கு கருணாநிதிதான் காரணம். இது தொடர்பாக நான்எழுப்பிய கேள்விகளுக்கு கருணாநிதி இன்னும் பதிலளிக்கவில்லை.
தமிழ்நாடு விடுதலைப்படையினர், தமிழ்நாடு மீட்புப் படையினர் ஆகியோரின் செயல்பாடுகள் அதிகரித்து விட்டன. இவர்கள் வீரப்பனுடன் சேர்ந்து நாட்டைத் துண்டாடநினைக்கிறார்கள்.
தமிழ் மக்களின் வாழ்வில் இருள் விலகி வெளிச்சம் ஏற்படும் வகையில் கருணாநிதிக்கும், தி.மு.க. வுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதற்கானபலம் அதிமுக விடம் இருக்கிறது. 2001 ம் ஆண்டு எம்.ஜி.ஆர்.ஆட்சி அமையும் என்றார் ஜெயலலிதா.