தலைநகரில் பவர் கட்
டெல்லி:
டெல்லியில் உள்ள மின்சார விநியோக நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக டெல்லி முழுவதும் செவ்வாய்க்கிழமை மின்சாரம் தடைபட்டது.
பிரதமர் வாஜ்பாயின் அலுவலகத்திலும் மின்சாரம் தடைபட்டது. இதையடுத்து மின்சார விநியோகத்திற்காக மாற்று நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டது.
மின்சாரம் இல்லாததால் மோட்டார் வைத்திருக்கும் வீடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. ரயில்வே இலாகாவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.பிற்பகல் 2 மணி வரை டெல்லியின் பல பகுதிகளில் மின்சாரம் இல்லை. இதனால் டெல்லி முழுவதும் இருட்டில் மூழ்கியிருந்தது.
மின்சாரம் விநியோகம் செய்யும் நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக ஒட்டுமொத்த மின் விநியோகமும் தடைபட்டது.
தலைநகர் டெல்லியிலிருந்தே ஹரியனா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு மின்சாரம் விநியோகம் செய்யப்படுவதால் அந்த மாநிலங்களுக்கும்மின் விநியோகம் செய்வதில் தேக்கம் ஏற்பட்டது.
தினமும் டெல்லிக்கு 2,600 மெகா வாட் மின்சக்தி தேவைப்படுகிறது. நான்கு மின் உற்பத்தி நிலையங்களிலும் மின்சார விநியோகம் செய்யப்பட்டு வந்தாலும்500 மெகா வாட் மின்சாரம் அதிகமாகத் தேவைப்படுகிறது. இதனால் மின் விநியோகத்தில் பற்றாக்குறையே ஏற்பட்டு வருகிறது.
பற்றாக்குறையை ஈடு செய்ய பாதர்பூர் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் கடந்த ஒரு வாரமாக மின்விநியோகத்தில் தேக்க நிலையே நீடித்து வருகிறது. ஜனவரி 3 ம் தேதிக்குப் பிறகு மின் விநியோகத்தில் பிரச்சனை இருக்காது என்று டெல்லி மின்துறைஅமைச்சர் நரேந்திர நாத் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.