3 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்திற்கு தடை விதிக்க கோர்ட் மறுப்பு
சென்னை:
பாண்டிச்சேரி த.மா.கா மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள் மூன்று பேரை பதவி நீக்கம் செய்து புதுவை சபாநாயகர் பிறப்பித்த உத்திரவுக்கு இடைக்காலத்தடை விதிக்க உயர்நீதிமன்ற முதல் டிவிஷன் பெஞ்ச் மறுத்து விட்டது.
பாண்டிச்சேரி த.மா.கா மனோகர் பிரிவு எம்.எல்.ஏக்கள் மனோகர், ராஜசேகர் உடையார், ஏழுமலை ஆகிய மூன்று பேரும் உயர் நீதிமன்றத்தில்தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:
தமிழக த.மா.காவிற்கும் பாண்டிச்சேரி த.மா.கா.விற்கும் கட்சி விதிகளில் வித்யாசம் உண்டு. கடந்த சட்டசபைத் தேர்தலில் பாண்டிச்சேரி த.மா.காவில்ஐந்து எம்.எல்.ஏக்கள் தேர்ந்து எடுக்கப் பட்டோம். ஊழலை எதிர்த்து தொடங்கப்பட்ட த.மா.கா தனது கொள்கையை மாற்றிக் கொண்டதால்நாங்கள் மூன்று பேரும் தனியே பிரிந்து த.மா.கா மனோகர் பிரிவு என்று செயல்பட்டு வருகின்றோம்.
தற்பொழுது அமைச்சர்களாக இருக்கும் கந்தசாமி, தேனீ ஜெயக்குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரில் கடந்த ( டிசம்பர்) மாதம் 25-ம் தேதி எங்கள்மூவரின் பதவியையும் சபாநாயகர் ரத்து செய்துள்ளார். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சபாநாயகர் இந்த உத்தரவைப் பிறப்பித்தது, சட்ட விரோதம்.
எனவே, சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி கே.பி.சிவசுப்பிரமணியன் ,புதுவை சபாநாயகரின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்தார். இது குறித்து ஒரு வாரத்தில் பதில் தரும் வகையில் புதுவை சபாநாயகர், சட்டசபைச்செயலாளர், அமைச்சர்கள் தேனீ. ஜெயக்குமார் , கந்தசாமி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்திரவிட்டார்.












Click it and Unblock the Notifications