பசிக்கொடுமையால் திசைமாறிய பறவைகள்
சேலம்:
சேலத்தில் பசிக்கொடுமையால் வீட்டை விட்டு வெளியேறிய அக்காவும், தம்பியும் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
சேலம் புதிய பஸ் நிலையத்தில் ஒரு சிறுவனும், ஒரு சிறுமியும் தவித்துக் கொண்டு நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் நெடுநேரம் அழுதுகொண்டிருந்தார்கள். அவர்களை ஒருவர் அழைத்துக் கொண்டு வந்து சேலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொண்டு வந்து ஒப்படைத்தார்.
பெண் போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது கிடைத்த விவரங்கள்:
சிறுமி பெயர் தமிழ்செல்வி (10), சிறுவன் பெயர் ஸ்ரீதர் (8). இவர்களின் தாய் தந்தை பெயர்கள் கிருஷ்ணன், மகேஸ்வரி. இவர்கள் இருவரும் தக்காளிப்பழவியாபாரம் செய்து வந்தார்கள்.
சம்பவத்தன்று கணவன், மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாலும், வீட்டில் பொருட்கள் எதுவும் இல்லாத காரணத்தாலும் சமையல்செய்யவில்லை. இதனால் குழந்தைகள் இருவரும் பசியால் தவித்தனர்.
வீட்டில் சமையல் செய்யாததால் இருவரும் உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொண்டு சேலம் பஸ் நிலையத்திற்குச் சென்றனர். அங்குஅவர்களுக்கு என்ன செய்வது? எங்கே போவது? என்று தெரியவில்லை. அதனால் இருவரும் நெடுநேரம் அழுது கொண்டே இருந்தனர். இதையடுத்துவாலிபர் ஒருவர் அவர்களை சேலம் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.