அஞ்சல் வழியில் இ- காமர்ஸ்
சென்னை:
தொலை தூரக் கல்வி மூலம் இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பை வழங்க அண்ணாமலை பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளதாக பல்கலைக்கழக துணைவேந்தர்வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
சிங்கப்பூரில் உள்ள எச். எம்.எச். சர்வதேச கல்வி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து இ காமர்ஸ் தொலை தூரக் கல்வியை வழங்க அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
சிங்கப்பூரில் தொலை தூர இ காமர்ஸ் கல்வி கடந்த மே மாதம் தொடங்கப்பட்டது. அது நல்ல வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தியாவில் அடுத்த மாதம்முதல் தொடங்கவிருக்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டு வரும் புரட்சியை கருத்தில் கொண்டு இந்த கல்வியை வழங்க அண்ணாமலைப்பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவில் டெல்லி, பெங்களூர், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு உள்பட 14 இடங்களில் தகவல் தொழில்நுட்ப மையம் இதற்காக நிறுவப்படும்.
ஒவ்வொரு பாடத்திட்டமும் 400 மணி நேரம் நடக்கும். அதாவது தினமும் 3 மணி நேரம் வகுப்புக்கள் நடக்கும். இந்த இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பை படித்துமுடித்தவர் ஒருவர் டிசைனராகவோ அல்லது டெவலப்பராகவோ ஆக முடியும்.
இந்த இ காமர்ஸ் சான்றிதழ் படிப்பில் வெப் டிசைனிங், சிஸ்டம் புரோக்கிராமிங், டெவலப்மென்ட், ஜாவா, ஏ.எஸ்.பி. போன்ற படிப்புக்களைப் படித்துப் பயன்பெறலாம் என்றார்.
யு.என்.ஐ