மீண்டும் மீண்டும் நிலநடுக்கம்
கோவை:
தமிழகத்தில் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தச் சம்பவத்தில் ஏராளமான வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கோவை, தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டன. நீலகரி மாவட்டம் குன்னூர் மவுன்ட் ரோடு, தேர்முட்டி, வெலிங்டன் ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை 8.15 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் 4 விநாடிகள் நீடித்தது. அப்போது வீட்டில்வைக்கப்பட்டிருந்த பொருட்கள் எல்லாம் கீழே சரிந்து விழுந்தன.
தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், உத்தமபாளையம் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கம்பம் அரசமரத் தெரு, பெரிய பாத்திரக்கடை தெரு,கம்பம் மெயின் ரோடு, வரதராஜபுரம் உள்பட பக்கத்து கிராமங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஆண்டிப்பட்டி, பெரியகுளம், தேனி ஆகிய இடங்களில் 5 வினாடிகளும், தேக்கடியில் 14 வினாடிகளும் நில நடுக்கம் காணப்பட்டது. நிலநடுக்கத்தால் பெரியாறுஅணைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ராஜபாளையடுத்த முகவூரில் விவசாய சங்க துணை செயலாளர் ஜனார்த்தனம் என்பவர்வீட்டு காம்பவுண்டு சுவரிலும், மொசைக் தரையிலும் கீறல் விழுந்தது.
தூத்துக்குடியில் ஆசிரியர் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி, ஆதிபராசக்தி நகர், பிரையன்ட் நகர் உள்பட பல இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம்ஏற்பட்ட போது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. கட்டிலில் படுத்து இருந்தவர்கள் கீழே விழுந்தனர்.
நெல்லை மாவட்டங்களில் நெல்லை நகரம், தென்காசி, ஆயகுடி, கீழபாவூர், கடையம் ஆகிய இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 4 வினாடிகள்நிலநடுக்கம் நீடித்தது.
நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை, இருப்பினும் வழக்கம்போல் வீடுகள் அதிர்ந்தன. பாத்திரங்களும், பொருட்களும்உருண்டு கீழே விழுந்தன.
2 வயது குழந்தை பலி:
நிலநடுக்கத்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கடையத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் 2 வயது குழந்தை இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தது.மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.