வாஜ்பாய் வியட்நாம், இந்தோனேசியா சுற்றுப்பயணம்
டெல்லி:
பிரதமர் வாஜ்பாய் ஒரு வார அரசு முறைப் பயணமாக வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை காலை டெல்லி, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்ப வியட்நாம் தலைநகர்ஹனோய் புறப்பட்டார் வாஜ்பாய். உள்துறை அமைச்சர் அத்வானி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், மூத்த அமைச்சர்கள் ராம் விலாஸ் பாஸ்வான்,சுஷ்மா சுவராஜ் ஆகியோர் வாஜ்பாயை வழியனுப்பி வைத்தனர்.
விமான நிலையத்தில் வாஜ்பாய் நிருபர்களிடம் கூறியதாவது:
வியட்நாம், இந்தோனேசியா ஆகிய நாடுகளுடன் பாரம்பரிய தொடர்பும், நெருங்கிய நட்புறவும் வைத்துள்ளோம். இதை மேலும் வலுப்படுத்தும் விதத்தில்இந்த சுற்றுப்பயணம் அமைகிறது. அதை அரசியல் ரீதியாக புதுப்பிக்கவும் இது வாய்ப்பு ஏற்படுத்தும் என்றார்.
மூன்று நாட்கள் வியட்நாம் சுற்றுப்பயணத்திற்குப் பிறகு வரும் 10 ம் தேதி ஹனோயில் இருந்து இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவுக்கு வாஜ்பாய்செல்கிறார். இந்தோனேசியா தலைவர்களுடன், வாஜ்பாய் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு சம்பந்தப்பட்ட வர்த்தக பரிமாற்றம்முக்கியமாக விவாதிப்பார்.
பொதுத்துறை நிறுவனங்களான இந்திய எண்ணெய் கழகம், இந்திய இயற்கை எரிவாயுக் கழகம் ஆகியவை ஏற்கனவே இந்தோனேசிய நிறுவனங்களுடன்இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.