இந்தியாவைப் புகழ்கிறது சீனா
பீஜிங்:
ஆசியாவிலேயே மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியா, உலகளவில் சர்வதேச விவகாரங்களில் முக்கிய பங்கு வகிக்கும் என்று சீனா புகழ்ந்துள்ளது.
இந்தியாவில் செவ்வாய்க்கிழமை முதல் 17 ம் தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள சீனாவின் மூத்த தலைவர் லீ பெங் கூறியதாவது:
தெற்காசியாவில் மிகப்பெரிய நாடு இந்தியா. சர்வதேச அளவிலும், பிராந்தியா அளவிலும் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும். இந்தியாவுடன் நட்புறவைமேம்படுத்துவதை சீனா விரும்புகிறது. இரு நாடுகளுக்கிடையே நட்புறவை மேம்படுத்துவதே எனது குறிக்கோள்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன் சுற்றுப்பயணம் செய்தேன். இந்த 10 ஆண்டுகளில் சர்வதேச அளவில் மட்டுமின்றி, இந்தியா- சீன நாடுகளில் பலமாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், தொழில்நுட்ப துறையிலும் அபரிமிதமான முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்தியா மேலும் பலதுறைகளில் வளர்ச்சியடையும். இந்திய ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் வாஜ்பாய் தவிர, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்தித்துப்பேசவுள்ளேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.