21 அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கை இலுப்பைக்கடவு பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 21 அகதிகள் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைக்கு வந்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் சண்டை நிறுத்தம் அறிவித்த பின்னரும் கூட இலங்கை ராணுவ வீரர்கள் தமிழர்கள் வசித்து வரும் பகுதிகளில் தாக்குதல் நடத்திவருகிறார்கள்.
இதனால் அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாக படகுகள் மூலம் தமிழகத்திற்குக் குடும்பத்துடன் வந்து கொண்டு இருக்கின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை இலுப்பைக்கடவு பகுதியில் இருந்து 12 குடும்பங்களைச் சேர்ந்த 21 பேர் தனுஷ்கோடி அரிச்சமுனை கடற்கரைக்குவந்தனர்.
கரைக்கு வரும்போது இந்திய கடற்படை ரோந்து படகு, அகதிகள் படகை மடக்கிப் பிடித்தது.
அங்கு அகதிகளை இறக்கி விசாரித்தனர். பின்னர் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு அகதிகள் மண்டபம் முகாமிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். அகதிகளை ஏற்றி வந்த படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.