கூட்டணிக் கட்சிகள் கூட்டம் .. அதிமுக புறக்கணித்தது
சென்னை:
சென்னையில் திராவிட கழக அலுவலகத்தில் புதன்கிழமை நடந்த மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் அ.தி.மு.க.கலந்து கொள்ளவில்லை.
இதுகுறித்து திராவிட கழக பொதுச்செயலாளர் வீரமணி கூறியதாவது:
மத்தியில் பாரதிய ஜனதா கட்சி, விஸ்வ ஹிந்துப் பரிஷத்தின் உதவியுடன் மதவாத கொள்கையுடன் கூடிய ஆட்சியை நடத்துகிறது. இதை எதிர்த்து மனிதநேயபாதுகாப்பு தினம் ஜனவரி 22 ம் தேதி அனுசரிக்கப்படும். அந்த நாள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தப்படும்.
ஜனவரி 22 ம் தேதி தலைநகர் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் மனித சங்கிலி போராட்டம் நடத்துவது குறித்து விவாதிப்பதற்காகமதச்சார்பற்ற கூட்டணி தலைவர்கள் புதன்கிழமை கூடி விவாதித்தனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க.வுக்கும் அழைப்புவிடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அ.தி.மு.க. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இது மதச்சார்பற்ற கூட்டணியில் உள்ள இதர கட்சிகளுக்கும், அ.தி.மு.க.வுக்கும்இடையே இடைவெளியை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அ.தி.மு.க.இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு வலுவான காரணம் ஏதாவதுஇருக்கலாம்.
மேலும் மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் மதச்சார்பற்றி கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். புதன்கிழமை நடந்தகூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பீட்டர் அல்போன்ஸ், சிபிஐ மாநிலபொதுச்செயலாளர் நல்லகண்ணு, சிபிஐ (எம்) சார்பில் வரதராஜன், இந்திய முஸ்லீம் லீக், இந்திய தேசிய லீக், ஜனதா தளம், அகில இந்திய பார்வர்டு பிளாக்,அம்பேத்கார் மக்கள் இயக்கம், இந்தியக் குடியரசுக் கட்சி ஆகியவை கலந்து கொண்டன.
இந்தக் கூட்டத்தை அ.தி.மு.க. ஏன் புறக்கணித்தது என்று தெரியவில்லை. பாரதிய ஜனதாவுடன் மீண்டும் அ.தி.மு.க.கூட்டணி வைத்துக் கொள்ளவிரும்புகிறதா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. இதுகுறித்து அ.தி.மு.க.பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஏற்கனவே பாரதிய ஜனதாவுடன்கூட்டணி இல்லை என்று தெளிவாகக் கூறி விட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் இடிப்பு விஷயத்தில் மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமாபாரதிக்குத் தொடர்பு உள்ளது. இந்த அமைச்சர்களை பிரதமர் வாஜ்பாய் பாதுகாத்து வருகிறார் என்றார் வீரமணி.
யு.என்.ஐ.