அலங்காநல்லூரில் 16-ம் தேதி ஜல்லிக்கட்டு
மதுரை:
பொங்கல் திருநாளை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக் கட்டு ஜனவரி மாதம் 16ம் தேதி நடக்கிறது. இதனை உலக நாடுகளைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கவுள்ளனர்.
பழங்காலந் தொட்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு வீர விளையாட்டுகள் தமிழகத்தில் இடம் பெற்று வருகிறது. ஒவ்வொருபகுதியிலும் வித்தியாசமான போட்டிகள் இடம் பெறுவது வழக்கம்.
இந்த தமிழர் திருநாளான பொங்கல் நாளில் வீரத்திற்கு முதலிடம் அளிக்கப்படுகிறது.
சர்வதேச அளவில் புகழ்வாய்ந்த விளையாட்டு தான் ஜல்லிக்கட்டு எனப்படும் காளை அடக்கும் வீர விளையாட்டு.
அலங்காநல்லூரில் ஒவ்வாரு ஆண்டும் சிறப்பாக நடக்கும் இந்த வீர விளையாட்டு இந்த ஆண்டு ஜனவரி மாதம் 16ம் தேதிநடக்கிறது. இந்த விளையாட்டு அலங்காநல்லூர் காளியம்மன் முனியப்பசாமி கோயில் திருவிழாவையடுத்து நடக்கிறது.
சர்வதேச நாடுகளிலிருந்து இந்த விளையாட்டைக் காண சுற்றுலாப் பயணிகள் வந்து குவியத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டு,வெளிநாட்டு டி.வி சேனல்களும் இதனைப் படம் பிடிக்க, இடத்தை தேர்வு செய்து வருகின்றனர். அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர்,டென்மார்க், ஹாலந்து, ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் தற்போது அலங்காநல்லூரில் முகாமிட்டுள்ளனர்.
இந்த ஆண்டு நடக்கும் ஜல்லிக் கட்டில் பூஸ்ட் நிறுவனம் தங்கக் காசுகளை பரிசாக அளிக்கவுள்ளது. இதனால், அலங்காநல்லூர்ஜல்லிக் கட்டு இந்த ஆண்டு களை கட்டும் என்று தெரிகிறது.