தேர்தல் கூட்டணி .. குழு அமைக்கிறது த.மா.கா.
சென்னை:
தேர்தல் கூட்டணி குறித்து முடிவெடுப்பதற்காக தேர்தல் பணிக்குழு அமைக்க தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல்விவகாரக் குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
தமிழக சட்டசபைக்கு இன்னும் 3 மாதங்களில் தேர்தல் வரவிருக்கிறது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்றால்கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கூறி வருகிறது.
ஆனால் கூட்டணி ஆட்சியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள். விரும்பவும் மாட்டார்கள் என்றுஅ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதனால் தேர்தல் கூட்டணி அமைப்பதில் அ.தி.மு.க., த.மா.கா. கட்சிகளிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே த.மா.கா. அரசியல் விவகாரக்குழு மற்றும் முக்கிய நிர்வாகிகள் கூட்டம் சென்னை சத்யமூர்த்திபவனில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு த.மா.கா. தலைவர் மூப்பனார் தலைமை தாங்கினார்.கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தங்களுக்குத் தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
கூட்டம் முடிந்ததும் செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:
த.மா.கா.கட்சியின் அரசியல் விவகாரக்குழுக் கூட்டம் மூப்பனார் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பல்வேறு நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.
வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சகல பணிகளையும் திட்டமிட்டு செயல்படுத்த தேர்தல் பணிக்குழுஅமைக்கப்படும். அந்தக் குழுவை அமைக்க மூப்பனாருக்கு இக்கூட்டம் அதிகாரம் அளிக்கிறது என்ற தீர்மானம்கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
தேர்தல் பணிக்குழுவினர் கூட்டணி குறித்தும் முடிவெடுப்பார்கள். தேர்தல் பணிக்குழுவில் இடம்பெறும்உறுப்பினர்கள் பெயரை மூப்பனார் விரைவில் அறிவிப்பார்கள் என்றார்.