காஷ்மீரில் சண்டைநிறுத்தம் நீட்டிக்கப்படுமா?
டெல்லி:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கலாம் என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நவம்பர் 27 ம் தேதி முதல் இந்திய ராணுவ வீரர்கள் சண்டைநிறுத்தம் கடைபிடித்து வருகின்றனர். கடந்த மாதம் 26 ம்தேதியுடன் முடிவதாக இருந்த சண்டைநிறுத்தம் இம்மாதம் 26 ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 26 ம் தேதிக்குப் பிறகு சண்டைநிறுத்தம்நீடிக்கப்படுமா? ரத்து ஆகுமா என்பது குறித்து இன்னும் முடிவாகவில்லை.
காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவதால் சண்டைநிறுத்தத்தை நீடிப்பதில் அர்த்தமே இல்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர்பரூக் அப்துல்லாவும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் பங்காரு லட்சுமணனும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் பதட்டம் குறைந்து வருவதால் சண்டைநிறுத்தம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்படும் என்று தெரிகிறது. இதுதொடர்பாக அனைத்து அம்சங்களையும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.
இப்போதுள்ள சூழ்நிலையில் மேலும் ஒரு மாதம் சண்டைநிறுத்தத்தை மத்திய அரசு நீடிக்கலாம் என்று தெரிகிறது. இருப்பினும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குஆதரவு கொடுக்கக் கூடாது. இந்தியாவுக்குள் தீவிரவாதிகள் ஊடுருவலை அனுமதிக்கக் கூடாது என்று இந்தியா தரப்பில் நிபந்தனைகள்விதிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சரவைப் பாதுகாப்பு கமிட்டி இன்னும் இரண்டு நாட்களில் கூடி இதுகுறித்து ஆலோசனை நடத்தும் என்று தெரிகிறது.