தே.ஜ.க.கூட்டத்தைக் கூட்ட பா.ம.க. கோரிக்கை
சென்னை:
தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சியின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியை நீக்குவது குறித்து விவாதிக்க தேசிய ஜனநாயகக் கட்சி கூட்டணிக் கூட்டத்தைக்கூட்ட வேண்டும் என்று முதல்வர் கருணாநிதியிடம் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
சனிக்கிழமை சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ஜி.கே.மணி கூறியதாவது:
தி.மு.க.தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பா.ம.க.தொடர்ந்து நீடித்து வருகிறது. இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்தக் கூட்டணியில்இருந்து வாழப்பாடி ராமமூர்த்தியை நீக்க வேண்டும் என்று நாங்கள் வைத்துள்ள கோரிக்கையில் எந்த மாற்றமும் இல்லை.
எங்களது கோரிக்கை குறித்து விவாதிப்பதற்காக, தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கருணாநிதி கூட்ட வேண்டும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற இந்தக் கூட்டம் மீண்டும் இதுவரை நடக்கவில்லை. எனவே உடனடியாக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதற்கு முதல்வர் கருணாநிதி உடனடி நடவடிக்கை எடுப்பார் என்று நம்புகிறோம் என்றார் மணி.