சட்டசபைத் தேர்தல் .. கைகோர்த்தன 2 ஜாதிகள்
சென்னை:
தமிழகத்தில் புதிதாக உருவாகியுள்ள ஜாதிக்கட்சிகளான, புதிய நீதிக்கட்சி மற்றும் மக்கள் தமிழ் தேசம் ஆகிய கட்சிகள் இரண்டும் வரும் சட்டசபைத்தேர்தலில் கூட்டணி வைத்துக் கொள்வதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தன.
முன்னாள் எம்.பி.யும், முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிகமாக உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவருமான சண்முகமும், முன்னாள் அமைச்சரும்,யாதவர்கள் அதிகம் உள்ள மக்கள் தமிழ் தேசம் கட்சியின் தலைவருமான கண்ணப்பனும் நிருபர்களுக்கு அளித்த கூட்டுப் பேட்டி:
வரும் சட்டசபைத் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளோம். புதிய கூட்டணியின் பெயர் தமிழ்நாடு ஜனநாயக முன்னணி. இதற்குதலைமையேற்க தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.
மக்கள் தமிழ் தேசம் கட்சி அலுவலகத்தில் நடந்த நீண்ட விவாதத்திற்குப் பிறகு கூட்டணி அமைக்க முடிவானது. எங்களின் புதிய கூட்டணிதான் தமிழகத்தில்வரும் தேர்தலில் ஆட்சியைப் பிடிக்கும். மூப்பனாரிடம் இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்து விட்டோம். அவர் இந்தப் புதிய கூட்டணிக்குத்தலைமையேற்பதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மக்கள் தமிழ் தேசமும், புதிய நீதிக்கட்சியும் இணைந்து போட்டியிட்டால் மொத்தம் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளில் 100 இடங்களைக்கைப்பற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. மூப்பனாரும் எங்கள் கூட்டணிக்கு வந்தால் இன்னும் அதிக இடங்களைப் பெற முடியும் என்று அவர்கள்தெரிவித்தனர்.
புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகம் கூறுகையில், விரைவில் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப்பேசவுள்ளேன். அதற்கு முன் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைச் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளேன்.
மேலும் மூன்று ஜாதிய அமைப்புக்கள் ஏற்கனவே தமிழ்நாடு ஜனநாயக முன்னணியில் சேர சம்மதம் தெரிவித்துள்ளன என்றார்.
இதற்கிடையே, குடியரசு தினத்தன்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு சண்முகம், கண்ணப்பனுக்கு,மூப்பனார் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் மூப்பனார் தமிழ்நாடு ஜனநாயக முன்னணிக்கு தலைமை வகிக்கலாம் என்று தெரிகிறது.
தமிழ் மாநில காங்கிரஸ் அதிமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. த.மா.கா. இன்னும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவுசெய்யவில்லை.
யு.என்.ஐ.