ராஜ்குமார் ஏன் நன்றி கூற வரவில்லை?
சென்னை:
வீரப்பன் பிடியிலிருந்து மீட்கப்பட்ட பிறகு கன்னட நடிகர் ராஜ்குமார், ஏன் வந்து தமிழக முதல்வர் கருணாநிதியைச்சந்திக்கவில்லை என்று தமிழக சட்டசபையில் சூடான விவாதம் நடந்தது.
சட்டசபையில், ஆளுநர் மீதான உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் உறுப்பினர்கள் பேசினர். தமிழ் மாநிலகாங்கிரஸ் உறுப்பினர் அழகிரி பேசுகையில், ராஜ்குமார் விவகாரத்தைக் கையில் எடுத்தார்.
அழகிரி பேசுகையில், கடத்தல் விவகாரத்தில், தமிழக அரசு சரியாக நடந்து கொள்ளவில்லை என்று ராஜ்குமார்நினைத்தார். அதன் காரணமாகவே அவர் முதல்வரைச் சந்தித்து நன்றி கூற வரவில்லை.
காட்டுக்குள், தமிழக அரசுக்கும், வீரப்பனுக்கும்இடையே நடந்த ரகசிய பேரத்தை நேரில் பார்த்தவர்.அதனால்தான், மனக் கசப்புற்று, தமிழகத்திற்கு வந்து முதல்வரைப் பார்க்க அவர் விரும்பவில்லை என்றார்.
அப்போது மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி எழுந்து, அழகிரி சொல்வது முற்றிலும் கட்டுக்கதை. அதில் சிறிதும் உண்மையில்லை.
ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்டவுடன், அவரது மகன்கள், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பலர் நேரில் வந்துமுதல்வர் கருணாநிதியைச் சந்தித்து நன்றி தெரிவித்தார்கள்.
ஆனால், உடல் நிலை காரணமாக ராஜ்குமாரால் நேரில் வர முடியவில்லை. மேலும், நன்றி சொல்வதற்காகசென்னைக்கு வந்து சிரமப் படத் தேவையில்லை என்று ராஜ்குமாரிடம், கருணாநிதியே அறிவுறுத்தினார் என்றார்வீராசாமி.
யு.என்.ஐ.