ஜாதிக் கட்சிகளை குறி வைக்கிறார் கருணாநிதி
சென்னை:
தமிழகத்தில் வரவுள்ள சட்டசபைத் தேர்தலில் புதிதாகத் தோன்றியுள்ள ஜாதிக்கட்சிகளை தங்களது கூட்டணியில் இணைக்க தி.மு.க திட்டமிட்டு வருகிறது.இதற்காக ரகசியப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அ.தி.மு.க.பாணியில் தி.மு.க.வும் ரகசியப் பேச்சுவார்த்தைக்குத் திட்டமிட்டு வருவதால் மூப்பனார் தனிமைப்படுத்தப்பட்டு விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்திற்கு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்கும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தி.மு.க வுக்கு எதிரான எந்த அணியையும் சேர்த்துக் கொள்ளத் தயார் என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜாதிக்கட்சிகளான புதிய நீதிக்கட்சியும், மக்கள் தமிழ் தேசமும் மூப்பனார் தலைமையில் தமிழக ஜனநாயகக் கூட்டணி அமைக்கும்முயற்சியில் இறங்கியுள்ளன.
இதனால் உஷாரடைந்த தி.மு.க ஜாதிக்கட்சிகளை தன்னுடன் கூட்டணி சேர்த்து, மூப்பனாரை தனிப்படுத்தும் முயற்சியில் களத்தில் இறங்கியுள்ளது. இதன்முதல்கட்டமாக சபாநாயகர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன், புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகத்தைச் சந்தித்துள்ளதாகத் தெரிகிறது.
முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த பழனிவேல்ராஜனை தனது அரசியல் குரு என்று சண்முகம் அடிக்கடி கூறுவது குறிப்பிடத்தக்கது. இதனால்பழனிவேல்ராஜனின் பேச்சை, சண்முகம் தட்டமாட்டார் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இருவரும் நடத்திய பேச்சுவார்த்தையில், புதிய நீதிக்கட்சிக்கு 5தொகுதிகள் வழங்க வேண்டும் என்றும், தனக்கு ராஜ்யசபா எம்.பி.பதவியைத் தர வேண்டும் என்றும் சண்முகம் கூறியதாகத் தெரிகிறது.
தேர்தலில் 5 சட்டசபைத் தொகுதிகளை வழங்குவதற்கு பழனிவேல் ராஜன் சம்மதம் கொடுத்து விட்டார். மேலும் ராஜ்யசபா எம்.பி. பதவி குறித்துவிரைவில் முதல்வர் கருணாநிதியுடன் பேசி தெரிவிப்பதாகவும்ம் அவர், சண்முகத்துக்கு உறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மக்கள் தமிழ் தேசம் கட்சி தலைவர் கண்ணப்பனைச் சந்தித்துப் பேச, அமைச்சர் தமிழ்க்குடிமகன் சென்றார். பேச்சுவார்த்தையில் கண்ணப்பன் தங்களுக்கு10 தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் தி.மு.க தரப்பில் 5 தொகுதிகள் கொடுப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
இப்படிச் செய்வதால் அ.தி.மு.க பலம் பெற்று விடாமலும், த.மா.கா. தனிமைப் படுத்தப்பட்டு விடும் என்பதால் தி.மு.க வுக்கு ஆதரவானஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் தி.மு.க வியூகம் அமைத்துள்ளது.