குதிரைகள் மர்ம சாவு... விசாரணைக்கு உத்தரவு
சென்னை:
தமிழகத்தில் குதிரைகள் மர்மமாக இறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்தார்.
சென்னையில் புதன்கிழமை அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
சமீபத்தில் தமிழகத்தில் ஏராளமான குதிரைகள் மர்மமான முறையில் இறந்தன. டெல்லியிலும், புனேயிலும் இதேபோல் குதிரைகள் இறந்துள்ளன.ஆனால் ஒரே நேரத்தில் இவ்வளவு அதிகமான குதிரைகள் இறந்தது சென்னையில்தான்.
இந்தச் சம்பவம் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து முழுமையாக ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளோம். குதிரைகள் இறந்த சம்பவம்குறித்து ஆய்வு நடத்த தமிழக அரசு முழு ஒத்துழைப்பு தருவதாக அமைச்சர் ஆற்காடு வீராசாமி என்னிடம் தெரிவித்துள்ளார் என்றார் மேனகா காந்தி.
முன்னதாக அமைச்சர் மேனகா காந்தி, கிண்டியிலுள்ள கிங் நிலையத்துக்குச் சென்று அங்கு குதிரைகள் இறந்த சம்பவம் தொடர்பாக ஆய்வு நடத்தினார்.குதிரைகளுக்கு என்ன புல் போடப்படுகிறது. அவைகளுக்கு அளிக்கப்படும் உணவு வகைகள் என்னென்ன என்பது குறித்தும் ஆய்வு நடத்தினார்.
யு.என்.ஐ.