கடல் விரிசலால் பூகம்பம்?
தூத்துக்குடி:
இந்தியப் பெருங்கடலுக்கு அடியில் ஏற்பட்டுள்ள பெரிய விரிசல் காரணமாகவே, குஜராத் மாநிலத்தில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டுள்ளது என்று தூத்துக்குடிபேராசிரியர் ராமானுஜம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கில் உயிர்களை பலிவாங்கிய குஜராத் பூகம்பம் குறித்து, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் கல்லூரி நிலவியல் துறை பேராசிரியர் ராமானுஜம்நிருபர்களிடம் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட பூகம்பம் அதிக பட்சமாக 7.9 ரிக்டர் அளவு பதிவாகி உள்ளது. அதன் காரணமாக அதிகபாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பூகம்பம் எப்படி ஏற்பட்டது என்று தெளிவாகக் கூற முடியவில்லை. இது குறித்த ஆராய்ச்சியில் இந்தியா மட்டுமின்றி அனைத்து நாடுகளும் இறங்கியுள்ளன.
ஆராய்ச்சிக்குப் பண்டைய காலங்கள் குறித்த குறிப்புக்கள் எதுவும் கிடைக்கவில்லை. சமீபத்தில் இந்தியாவில் பல இடங்களில் ஏற்பட்ட பூகம்பம் குறித்ததகவல்கள் மட்டுமே ஆராய்ச்சிக்குக் கிடைத்துள்ளன.
அதன்படி பார்க்கும் போது 1668 ம் ஆண்டு முதல் இதுவரை குஜராத் மாநிலத்தில் மட்டும் 93 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது. இதில் 200ஆண்டுகளுக்கு முன்பு அதிகபட்ச அளவாக 8 ரிக்டர் அளவு பூகம்பம் ஏற்பட்டது. அதன் பின்னர் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பம் 7.9 ரிக்டர் அளவுபதிவாகியுள்ளது. இதில் பூஜ் பகுதியில் மட்டும் இதுவரை 22 முறை பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
இந்தியா வடக்கு நோக்கி நகர்வதால் இந்த பூகம்பம் ஏற்பட்டதாக சிலர் கூறுகிறார்கள். இதன் காரணமாக இமயமலை பகுதியில் அடிக்கடிபூகம்பம் ஏற்பட்டு வருகிறது. குஜராத் மாநிலத்தில் அடிக்கடி பூகம்பம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
இந்தியப் பெருங்கடலுக்கடியில், விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனுடைய அழுத்தம் தெற்கு திசை நோக்கியும், வடக்கு திசை நோக்கியும் செல்கிறது.வடக்கு திசை நோக்கிச் செல்லும் அழுத்தம் எவ்வித தடையும் இல்லாத காரணத்தால் நேராக குஜராத் மாநிலத்தை நோக்கிச் செல்கிறது. இதனால்குஜராத்தில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.
நிலநடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தால் உடனே மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டும். பூகம்பத்தால் பாதிக்கப்படாதவாறு உறுதியானகட்டிடங்கள், வீடுகள் கட்டப்பட வேண்டும்.
புயல், மழை வருவதை முன்கூட்டியே அறிவிப்பது போல் நிலநடுக்கம் ஏற்படுவதை அறிய வாய்ப்பு இல்லை. இதற்கான ஆராய்ச்சியில் இந்தியா மற்றும்உலக நாடுகள் இறங்கியுள்ளன என்றார் ராமானுஜம்.