அடுத்தபடியாக, அருந்ததியர் சங்கம் ..
ராமநாதபுரம்:
இன்றைய அரசியல் காலகட்டத்தில் சமுதாயச் சங்கங்கள் தங்கள் சமுதாயத்தை காப்பதற்காக அரசியல் கட்சியாக மாறிவருகின்றன. அதற்கு தமிழ்நாடுஅருந்ததியர் சங்கமும் விதிவிலக்கல்ல.
பரமக்குடியில் நிருபர்களுடன் பேசிய அருந்ததியர் சங்கப் பொதுச்செயலாளர் அரு.சி.நாகலிங்கம், சங்கத்தின் 2வது மாநில மாநாடு சென்னை சீரணி அரங்கில் வரும்9ம் தேதி நடைபெறும்.
சுமார் ஒரு லட்சம் பேர் பங்கேற்க உள்ள இம்மாநாட்டில் அருந்ததியர் சங்கம் அரசியல் கட்சியாக அறிவிக்கப்படும்.
53 ஆண்டுகளாக அரசியல் கட்சிகள் அருந்ததியர் இனத்தை கண்டுகொள்ளாததால் அருந்ததியருக்காக ஆரம்பிக்கப்பட உள்ள அரசியல் கட்சியின் பெயர்,சின்னம், கொடி ஆகியவை சங்க மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
தமிழகத் தேர்தலில் அருந்ததியர் கட்சிக்காக 13 இடங்களை அளிக்கும் அணியுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்றும் தெரிவித்தார்.
இப்பேட்டியின் போது சங்கப் பொதுச்செயலாளருடன், மாநிலப் பொருளாளர் சமாதான சக்திவேல், ராமநாதபுர மாவட்ட செயலர் முனியராஜ், மாவட்டத்துணைத் தலைவர் சுந்தர்ராஜ், பரமக்குடி ஒன்றியத் தலைவர் சன்னாசி ஆகியோர் இருந்தனர்.