கொள்ளையர்கள் சுட்டுக்கொலை
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் கொள்ளையடித்தது தொடர்பாக 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
பூகம்பம் ஏற்பட்ட இடத்தில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளில் கொள்ளையர்கள் புகுந்து தங்கள் கைவரிசையைக் காட்டி வருகிறார்கள் என்றுபோலீஸாருக்குக் கிடைத்த புகாரையடுத்து அப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களும், போலீஸாரும் 24மணிநேரமும் ரோந்து சுற்றி வருகிறார்கள்.
பூகம்பத்தால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட பூஜ், அஞ்சார், பச்சாவ் பகுதிகளில் கொள்ளை நடந்து வருவதாகப் போலீஸாருக்குப் புகார்கொடுக்கப்பட்டது. இங்கு எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள், புறக்காவல் படை வீரர்கள் ஆகியோர் காவல் காத்து வருகின்றனர்.
இந்த நிலையில், கட்ச் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர், ஏ.கே.சிங் கூறுகையில், பூஜ் நகரில் பூகம்பத்தால் இடிந்து விழுந்த கட்டிடத்திலிருந்து பணம்மற்றும் நகைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு செல்லும்போது 3 கொள்ளையர்களைப் போலீஸார் சுட்டுக் கொன்றனர். மேலும் அவர்கள்கொள்ளையடித்துச் சென்ற நகை, பணம் ஆகியவற்றைப் போலீஸார் பறிமுதல் செய்தனர் என்றார்.
இதுதவிர ராஜ்கோட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கொள்ளையடித்த 9 பெண்களைப் போலீஸார்கைது செய்தனர். இதையடுத்து மருத்துவமனை முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மாநில காவல்துறை அமைச்சர் ஹரேன் பாண்டியா கூறுகையில், கொள்ளையடித்துக் கொண்டு பஸ்சில் தப்பித்துச் செல்ல முயன்ற 10 பேரை பஸ்சை நிறுத்திபோலீஸார் கைது செய்தார்கள் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.