இந்துப் பாரம்பரியத்தைக் காக்கும் முஸ்லீம் குடும்பம்
புவனேஸ்வர்:
இந்துக்கள் தங்கள் வாழ்வில் பல்வேறு வகையில் உபயோகிக்கும் முக்கியமான ஒன்று பஞ்சாங்கம். குழந்தை பிறந்த நேரம் அறிந்து பெயர்வைப்பதிலிருந்து, கல்யாணத்திற்கு நாள் குறிப்பது, தொழில் தொடங்க நல்ல நாள் பார்ப்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு இந்துக்களின் பஞ்சாங்கம்அவசியமாகிறது.
கடந்த 65 வருடங்களாக ஒரிஸ்ஸாவில் உள்ள இந்துக்கள் பயன்படுத்தும் கோஹினூர் பஞ்சாங்கங்களை வெளியிட்டு வருபவர்கள் ஒரு முஸ்லீம் குடும்பத்தினர் என்பதுசற்று வியப்பானதாக இருக்கும்.
கட்டாக்கில் வசிக்கும் ஜாரூல் என்பவர் தனது தந்தையை பின்பற்றி தானும் இப்பஞ்சாங்கங்களை தங்களின் ஒரிஸ்ஸா கோஹினூர் பிரஸ்ஸில் தயாரித்து வெளியிட்டுவருகிறார்.
1928ல் ஜாரூலின் தந்தை ஷேக் அமினுல் இஸ்லாம் இப்பிரஸ்ஸை ஆரம்பிக்கும் போது மாநிலத்தில் இருந்த மொத்த பிரஸ்களின் எண்ணிக்கை 5 அல்லது 6மட்டுமே. ஆரம்பம் முதலே இந்துக்களின் சமய நூல்களை இப்பிரஸ் வெளியிட்டு வருகிறது.
இந்துக் கோவில்களிலும் உபயோகிக்கப்படும் கோஹினூர் பஞ்சாங்கம் ஜோதிட சாஸ்திர நிபுணர்களின் உதவியுடன் 1935லிருந்து வெளிவருகிறது. பல்வேறுஉபநிஷதங்கள், புராணங்கள் மட்டுமல்லாது மகாபாரதம், ராமாயணம் போன்ற இதிகாச நூல்களும் இங்கு தயாராகின்றன.
சமயப்பணி மட்டுமல்லாது தேசப்பணியையும் மேற்கொண்டுள்ளது கோஹினூர் பிரஸ். விடுதலைப்போரின் போது பிரிட்டிஷ் அரசு 12 முறை பிரஸ்ஸில் சோதனைநடத்தியுள்ளது. ஆங்கிலேய ஆட்சிக்கு விரோதமான புத்தகங்களை அச்சிட்ட போது அதனை கைப்பற்றியதோடு அதனை வெளியிடவும் தடை விதித்துள்ளனர்.
கட்டாக்கில் 3 லட்சம் இந்துக்களும், 30,000 முஸ்லீம்களும் இருந்தாலும் இதுவரை எந்தவொரு இனமோதலும் இங்கு ஏற்பட்டதில்லை. சிலநேரங்களில் மோதல்கள் ஏற்பட்டிருந்தாலும் பாதிப்பற்ற அளவிலேயே இருந்துள்ளன.
ஜாரூல் மற்றும் அவரின் மூத்த சகோதரர் இணைந்து பிரஸ்ஸை கவனித்தாலும் பிரஸ்ஸின் பதிப்பக வேலைகளில் ஜாரூலின் குடும்பத்தினரும் பங்கேற்கின்றனர்.தங்கள் வருங்கால சந்ததியும் இப்பணியை தொடரும் எனக் கூறும் ஜாரூலும் அவரின் தந்தையும் அவர்களின் சிறந்த சேவைக்காக தேசீய மற்றும் மாநிலவிருதுகள் பலவற்றை பெற்றுள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.