ரஜினியை பார்த்தேனா? .. மறுக்கிறார் அமைச்சர்
பெங்களூர்:
விமானத்தில் நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்த்துப் பேசவில்லை என்று தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் தமிழ்க்குடிமகன் திங்கள்கிழமைதெரிவித்தார்.
தமிழக அமைச்சர் தமிழ்க்குடிமகன் ஞாயிற்றுக்கிழமை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்தார். அங்கிருந்து கோவா சென்றார்.அதே விமானத்தில் நடிகர் ரஜினிகாந்தும் பெங்களூர் வந்து பின்னர் கோவா சென்றார்.
தமிழக தேர்தல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், பல கட்சிகள் தேர்தல் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகிய பாட்டாளி மக்கள் கட்சி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்த த.மா.கா. வரும் சட்டசபைத் தேர்தலில் யாருடன் கூட்டணிவைத்துக் கொள்ளும் என்பதை ஒட்டுமொத்த தமிழகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
இதற்கிடையே, தமிழக அரசியலில் பல கட்சிகளுக்கு ஆதரவாக சமீப காலங்களில் குரல் கொடுத்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவரும்,தமிழ்க்குடிமகனும் ஒரே விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை பயணம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் கோவாவிலிருந்து பெங்களூர் திரும்பிய தமிழ்க்குடிமகன் தமிழ்ச்சங்கத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
1996 ம் ஆண்டு தி.மு.க., த.மா.கா.கூட்டணி ஏற்பட துக்ளக் ஆசிரியர் சோ காரணமாக இருந்தார் என்று கூறுகிறார்கள். அப்படி எதுவும் இல்லை.அவர் கூடு விட்டு கூடு பாயும் கோமாளி. மூன்றாவது அணி பற்றி நான் எதுவும் கருத்துக் கூற முடியாது.
நான் கோவா சென்ற போது என்னுடன் நடிகர் ரஜினிகாந்தும் வந்தார் என்றும் அவருடன், தமிழக தேர்தல் நிலவரம் குறித்துப் பேசினேன் என்றும்பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளன. ரஜினியை நான் பார்க்கவும் இல்லை. பேசவும் இல்லை.
தமிழகத்தில் வரும் தேர்தலுக்கு தி.மு.க.வுக்கு ஆதரவாக ரஜினிகாந்த் பிரச்சாரம் செய்வாரா என்பது குறித்து முதல்வர் கருணாநிதியிடம்தான் கேட்கவேண்டும் என்றார் தமிழ்க்குடிமகன்.