62 இடங்களில் வெற்றி பெறுவோம் .. பா.ஜ.க.
கோவை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெறுவதற்கு கருணாநிதி விடுத்த அழைப்பை, தமிழக பாரதிய ஜனதாக் கட்சி வரவேற்கிறதுஎன கட்சியின் தலைவர் கிருபாநிதி தெரிவித்தார்.
திருப்பூரில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் எஸ்.பி கிருபாநிதி கூறியதாவது:
தமிழகத்தில் பாரதிய ஜனதாக் கட்சிக்கு 62 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. அதற்காக 62 தொகுதிகளிலும் போட்டியிட முடியாது. வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ள தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவோம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் இடம் பெற கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார். கூட்டணியின் தலைவர் என்ற முறையில் த.மா.காவுக்கு அழைப்பு விடுத்துள்ளதை பாரதிய ஜனதாக் கட்சி வரவேற்கிறது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து எந்தக் கட்சி விலகினாலும், சேர்ந்தாலும் இக்கூட்டணியின் வெற்றி வாய்ப்பு எந்த விதத்திலும் பாதிக்கப்படாது.பாட்டாளி மக்கள் கட்சி விலகிச் சென்றபோதிலும் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றார் கிருபாநிதி.